தினம் தினமும் என்று ஒரு பாடல் சிறிது காலத்திற்கு முன் பிரபலமானது. விடுதலை 2 திரைப்படத்தில். தினம் தினமும் என்ற வார்த்தையை சாதாரணமாக அன்றாடம் என்று குறிப்பிடுவார்கள். பேச்சு வழக்கில் அன்னாடம் என்று சொல்வது உண்டு. அன்றன்று சம்பாதித்துக் காலம் கழிப்பவர்களை அன்றாடங் காய்ச்சி என்று அழைப்பார்கள். அன்றாடம், தினம் தினம், தினந்தோறும் என்பதை நல்ல தமிழ் வைகல் என்று சொல்லும். வருவிருந்து வைகலும ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று என்பது குறள். தன்னை நோக்கி வரும் விருந்தினரை தினந்தோறும் போற்றுபவன் வாழ்க்கை பாழ்படுவதில்லை என்பது பொருள். நற்றிணையில் ஒரு பாடல். வைகல் தோறும் இன்பமும் இளமையும் எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து; காணீர் என்றலோ அரிதே; அது நனி பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி தலைவியைப் பிரிந்த தலைவன் பொருள் ஈட்டச் சென்று விடுகிறான். இதைப் பொருள் வழிப் பிரிதல் என்று பழம் தமிழ் இலக்கியம் சொல்லும். பல நாட்கள் ஆயிற்று. அவன் திரும்பவில்லை. இங்கே இவள் வாடுகிறாள். இளமை கழிந்து கொண்டிருக்கிறது. எப்படி? எய்து விட்ட அம்பின் நிழல் போல அவள் இளமையும் இன்பமும் மறைகின்றதாம். தினம் தோறும் குன...