மரத்தடியில் மம்மூட்டி நின்றிருந்தார். கை விரல்களில் பீடி புகைந்து கொண்டிருந்தது. அவரைச் சுற்றி நாலைந்து பேர். அந்திப் பொழுது. அப்போது சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டப வளாகத்தின் விளக்குகள் ஏற்றப் பட்டன. மம்மூட்டியின் கரிய தலைமுடி வெளிச்சத்தில் மினுங்கியது. உலகத் திரைப்பட விழா அன்று.பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஷாகா பிரஷோகா (மரத்தின் கிளைகள்) என்ற படம் திரையிடப்பட இருந்தது. இசையும் இயக்கமும் சத்யஜித் ரே. நானும் ஏ.ஜி. அலுவலகத்தில் பணி புரிந்த நண்பர் சுரேஷும் மண்டபத்துக்கு வெளியே இருந்தோம். மம்மூட்டியைப் பார்த்தபடி வேறொரு மரத்தடியில். உள்ளே நுழைய அனுமதிச் சீட்டு எங்களிடம் இல்லை. ரேயின் படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தது. தமிழக அரசு விழாவை நடத்தியது. அரசு அலுவலர்கள் தான் அரங்க நுழைவில் இருப்பார்கள். படம் துவங்கும் போது உள்ளே அனுமதித்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படி நடக்க வில்லை. நுழைவில் தடுத்து நிறுத்தப் பட்டோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. எனது நண்பன் ஐ.ஓ.பி நரசிம்மன் அங்கே தென்பட்டது தற்செயல்....