A walk in the spring rain என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அது தற்செயலாக நடந்தது. தலைப்பிலே ஒரு கவிதை இருப்பது போல தோன்றியது. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் அது. இந்தப் படம் பார்க்கும் வரை இன்கிரிட் பெர்க்மன் என்ற பெண்மணியைப் பற்றித் தெரியாது. A walk in the spring rain 1970ம் ஆண்டு வந்திருக்கிறது. இன்கிட் பெர்மன் இந்தப் படத்தில் தோன்றும் போது ஐம்பது வயதைக் கடந்து விட்டிருந்தார். திரைக்கதை என்னவென்றால் பெர்க்மனின் கணவர் ஒரு புத்தகம் எழுதுகிறார். அதற்கான தனிமை வேண்டி நாட்டுப்புறப் பகுதிக்கு வருகிறார்கள். வளர்ந்த மகளை ஊரில் விட்டு விட்டு. பெர்க்மன் கணவர் புத்தகம் எழுத உதவிகள் செய்கிறார். அன்டனி க்வின் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்து தருகிறார். பெர்க்மன் இவருடைய எளிய கிராமியப் பண்புகளால் கவரப்படுகிறார். இயற்கையோடு இயைந்து இருக்கிறது அந்த மனிதனின் வாழ்வு. அவனால் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் வாய்க்கிறது. உள்ளங்கைகளில் அணில் குஞ்சின் குறுகுறுப்பை உணர்வது போல. அழகழகாய் ஆட்டுக் குட்டிகளை கைகளில் ஏந்துவதைப் போல. அந்த நல்ல பெண்மணி இந்த மனிதனிடம் பழகுவதில் ஆர்வம...