காந்தியின் வாழ்க்கையை முடித்து வைத்தது மூன்று துப்பாக்கிக் குண்டுகள். பிர்லா மாளிகையில் அவர் உடல் கிடத்தப்பட்டது. கிடத்திய உடல் மேல் அவர் குளிருக்குப் போர்த்தியிருந்த சால்வையை மெல்ல உருவியபோது நழுவி விழுந்தது ஒரு குண்டு. இன்னொன்று அவரது சடலம் முழுதும் எரிந்து சாம்பலைத் திரட்டும் போது கிடைத்தது. நேரு வானொலியில் உரை நிகழ்த்தினார். எந்த விதத் தயாரிப்பும் இன்றி பொங்கி வரும் உணர்ச்சியில் அவர் செய்த உரை அது. கண்ணீரைக் கட்டுப்படுத்தியபடி உணர்ச்சியில் குரல் நடுங்க அவர் செய்த உரை. நமது வாழ்வில் இருந்த விளக்கு மறைந்து விட்டது. எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பாபு என்று நாம் அழைக்கும் நமது அன்புத் தலைவர், தேசத் தந்தை, இன்று நம்மிடையே இல்லை. ஒரு வேளை நான் அப்படிச் சொல்வது தவறாக இருக்கக் கூடும். நாம் அவரை இத்தனை காலம் பார்த்துக் கொண்டிருந்தது போல இனிக் காண முடியாது. ஆலோசனைக்காகவும் ஆறுதல் மொழிக்காகவும் அவரைத் தேடி ஓட முடியாது. அது ஒரு பலத்த அடி. எனக்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கும் தான். வன்மையாக விழுந்த இந்த அடியை எனது ...