சில பாடல்கள் துள்ள வைக்கும். சில அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும். சில பாடல்கள் நமது நிம்மதியை ஒரேயடியாகக் குலைத்து விடும். ஒரு ஏக்கம் வந்து மெல்லத் தழுவிக் கொள்ளும். அப்படி ஒரு பாடலை சமீபத்தில் கேட்க வாய்த்தது. இந்த வாய்ப்பு அமையக் காரணம் தம்பி சேகர். ஓரு காலத்தில் கேட்டு காலப் போக்கில் நினைவிலிருந்து நழுவிய அந்தப் பாடலை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தான். நதியைத் தேடி வந்த கடல் என்று ஓரு திரைப்படம். மகரிஷி என்பவர் எழுதிய கதை திரைப்படம் ஆகி இருந்தது. இந்தப் படத்திற்கு இசை இளையராஜா. துவக்க இசையைக் கேளுங்கள். முடிந்தவுடன் எங்கேயோ என்று வந்து சேரும் சுசீலாவின் குரலைக் கேளுங்கள். இந்தப் பாடல் சுநாத வினோதினி என்ற ராகத்தில் அமைந்திருக்கிறது. சிவரஞ்சனியோ அல்லது ஹம்சாநந்தியோ என்று குழம்பி விட்டு பின்பு சுநாத வினோதினி என்று தீர்மானம் செய்ய நேர்ந்தது.