Skip to main content

Posts

Showing posts with the label இசை

செளடையாவின் வயலின்

 வயலின் என்ற ஒன்றை நான் அறிந்தது வானொலிப் பெட்டி மூலமாக. ஆகாஷவாணி ஒலிபரப்பு துவங்கு முன் ஒரு இசை வரும். அது தான் வயலின் என்று பிற்பாடு தெரிந்தது. அந்த வயலினோடு சுருதி சேர்த்த வண்ணம் ஒரு தம்பூரா ஒலியும் ரீங்காரமிடும். அம்மா காபி போடுவதற்காக கரி அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைப்பார்கள். நீர் மெல்ல மெல்லக் சூடேறி கொதி நிலைக்கு வரும் போது ஒரு ஓசை எழும். சுருதி சேர்த்த தம்பூரா ஒலியோடு மனம் அதை ஒப்பிட்டுப் பார்க்கும். காபி போடும் போது அம்மா ‘பரிமள ரங்கா எழுந்திரும்’ என்று பாடும் பூபாளம் சுருதி சுத்தமாக இருக்கும். சிறு வயதில் கேட்ட ஒரு கச்சேரியில் வயலின் இசை ஒன்று இணைந்து ஒலித்தது. அந்த ஓசை மாறுபட்டு இருந்தது. அது யார் வாசித்தது என்று கேட்டு அறிய முயன்றேன். அந்த ஓலியை எழுப்பியவர் மைசூர் செளடையா என்று அறிந்தேன். அவர் வாசித்தது அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு என்றும் தெரிந்து கொண்டேன். சாதாரணமாக வயலினில் நான்கு நரம்புகள் அல்லது ஐந்து இருக்கலாம். செளடையாவின் வயலினில் ஏழு நரம்புகள் இருக்கும். எனவே தான் நான் கேட்ட மாறுபட்ட ஒலி. எனவே தான் செளடையாவின் வயலின் பாடகர் குரல் ...

சாமத்தில் பூத்த மல்லி

  ஜெயச்சந்திரன் குரலில் ஒரு மென்மை இருக்கும். குழைத்து வைத்த சந்தனம் போல. அவருக்குப் பாடக் கிடைத்த பாடல்கள் எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. பாடலின் தன்மையைப் புரிந்து கொண்டு உணர்ச்சி கலந்து பாடக் கூடியவர். அதில் கொஞ்சம் கூட மிகை இருக்காது.  மணிப்பயல் என்று ஒரு திரைப்படம். அதில் ஒரு பாடல் தங்கச் சிமிழ் போல் இதழோ என்று. நான் அனேகமாக அப்போது பள்ளி இறுதி வகுப்பில் இருந்தேன். முதன் முதலாகச ஜெயச்சந்நிரனின் குரலைக் கேட்டேன். கிறங்கிப் போனேன். பல முறை வானொலிப் பெட்டியில் கேட்டிருக்கிறேன். பின்பு அலைகள் என்று ஒரு படம். ஸ்ரீதர் இயக்கியது. அதில் வரும் பொன்னென்ன பூவென்ன கண்ணே என்று ஒரு பாடல். கேட்டவுடன் பிடித்துப் போயிற்று. ஜெயச்சந்திரன் என்ற பாடகரோடு அவர் குரலையும் மனம் அடையாளம் கொள்ளத் துவங்கியது. அதற்குப் பிறகு எத்தனை எத்தனை பாடல்கள். அப்பாவுக்குப் பிடித்த சினிமாப் பாடல்கள் மிகச் சிலவே. வியப்பு என்னவென்றால் அதில் இரண்டு பாடல்கள் ஜெயச்சந்திரன் பாடியது. ஒன்று வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள். பிறிதொன்று தாலாட்டுதே வானம். ஏக்கம், தனிமை,காதல், இரக்கம் என்று எல்லா உணர்வுகளும் இவ...

உண்மை அறிந்தவர்

  மாயையைப் பழித்தல்  உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ? மாயையே-மனத் திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ !-மாயையே! எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும் மாயையே-நீ சித்தத் தெளிவெனுந் தீயின்முன் நிற்பாயோ?-மாயையே! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே!-நான் உன்னைக் கெடுப்பது உறுதியென்றே உணர்-மாயையே! சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு மாயையே!-இந்தத் தேகம் பொய் யென்றுணார் தீரரை யென் செய்வாய்!-மாயையே! இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப மாயையே!-தெளிந் தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ?-மாயையே! நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே-சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை-மாயையே! என்னிச்சை கொண்டுனை யெற்றி விட வல்லேன் மாயையே!-இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண்-மாயையே! யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே!-உன்றன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் உன்னை-மாயையே! பாரதியின் கவிதைகளில் நான் விரும்பிப் படிக்கும் கவிதைகளில் மேலே கண்ட கவிதையும் ஒன்று. பாரதியின் பாடல்கள் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது உண்டு. சிலர் சின்னஞ் சிறு கிளியை அழைத்து மேனி சிலிர்ப்பா...

பால் மணக்குது

  I felt a nostalgic longing for the childhood: emotions that had been beautiful because they were never completely understood                                                      Ruskin Bond புதிய நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு வாசம் வரும். ஐந்தாறு வயதுப் பிள்ளைகளான நாங்கள் அதை முகர்ந்து மகிழ்வோம். அட்டையில் வண்ணப் படம். அதில் ஒரு  அழகான பாலகன். நெற்றியில் திருநீற்றுப் பட்டை. நடுவில் குங்குமம். அழகான புன்னகை. அவன் மயிலை அணைத்தபடி இருப்பான். அவனுக்குப் பெயர் முருகனாம்.  இன்னுமொரு படம். அதில் அழகான பாலகன் அருகில் யானை முகத்தோடு ஒருவன் நிற்பான். அவன் பெயர் பிள்ளையார் என்று சொன்னார்கள். வயது ஒத்து இருந்ததால் அவர்களோடு ஒரு இயல்பான சிநேகம் கூடியது. அவர்கள் எல்லாம் தெய்வங்கள் என்று பிறர் வாயால் அறிய நேர்ந்தது. கற்பனை...

காற்றின் அலைகள்

 சிவசங்கரி எழுதிய கதை நண்டு. தினமணி கதிர் பத்திரிக்கையில் தொடராக வந்ததா? சரியாக நினைவில்லை. நான் அந்தக் கதையைப் படித்ததில்லை. என் சகோதரிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது ஒரு சோகமான கதை என்று. இந்தக் கதை திரைப்படமாக வந்தபோது பார்த்தேன். அது ஒரு நல்ல திரை அனுபவமாக இருந்தது.  உணர்வுகளைக் கடத்துவதில் இசை முக்கிய பங்காற்றியது.  இந்தப் படத்தில் டைட்டில் ஓடும் போது பின்னணியில் பாடல் ஒலிக்கும். பாடியவர் பூபேந்தர் சிங். இவர் ஹிந்தித் திரைப்படங்களில்  குறைவான பாடல்களையே பாடியிருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள். மேலே குறிப்பிட்ட பாடலில் பூபேந்தரின் குரலோடு சாளரம் சாளரமாக காலத்தின் கதவுகள் திறக்க காற்றைப் போல நாம் எங்கோ எங்கோ பின்னோக்கிச் செல்கிறோம். என்ன ஒரு குரல்? சில குரல்கள் அப்படித் தான் நம்மைப் பாதித்து விடுகிறது இல்லையா? கேட்கலாம். Note: No copyright infringement intended

கண்கள் செய்து விட்ட மாயம்

பட்னா நகரில் ஓரு நகலச்சகத்துக்கு நான் போவது உண்டு. அதன் உரிமையாளர் பெயர் ஆன்கிட். இளைஞன். அவன் அமர்ந்திருக்கும் மேசை நாற்காலிக்குப் பின்னால் அளவில் பெரிதான நிழற்படம் ஒன்று சுவரில் ஒட்டப்பட்டிருக்கும். அது மதுபாலாவின் படம்.  கனவில் மிதக்கும் கண்கள். கன்னங்களின் மீது விளையாடும் கூந்தல் இழைகள். சற்றே பிரிந்த உதடுகள். சிறிய பற்கள் பாதி தெரிந்தும் தெரியாமலும். அந்த கறுப்பு வெள்ளைப் படம் காண்பவரைக் கவரும் விதமாக இருந்தது. காலங்கள் எல்லாம் கடந்தும் அந்தக் கண்களும் உதடுகளும் உயிர் பெற்று வருவது போல ஒரு மயக்கம் தோன்றியது. நான் ஆன்கிட்டைக் கேட்டேன். உனக்கு மதுபாலாவைப் பிடிக்குமா என்று.  ஜீ(ஆமாங்க) என்று வெட்கத்துடன் சொன்னான். யாருக்குத் தான் அவரைப் பிடிக்காது என்று நினைத்துக் கொண்டேன். பேசும் படம் என்று ஒரு பத்திரிக்கை உண்டு. அது ஒரு சினிமாப் பத்திரிக்கை. அந்தப் பத்திரிக்கையின் பழைய இதழ்களின் தொகுப்பு அழகாக பைண்டு செய்யப் பட்டு கிராமத்து வீட்டில் இருக்கும்.   எட்டு ஒன்பது வயதில் விடுமுறைக்குச் செல்லும் போது பார்க்கக் கிடைக்கும். காகிதங்கள் வழவழப்பாக இருக்கும். அச்சு நல்ல தரத்த...

மஞ்சள் வெயில்

  அப்போது எல்லாம் சென்னையில் மியூஸியானோ என்று ஒரு இசைக்குழு இருந்தது. அதை வெற்றிகரமாக நடத்தி வந்தவர் பெயர் ரமணன்.  எழுபது கால கட்டங்களில் ஹிந்தித் திரை இசைப் பாடல்கள் தான் கோலோச்சியது. அந்த இசைக் குழுவில் ஓரு பெண் பாடுவார். புடவையைக் கால் நகம் வரை போர்த்தியபடி தான் பாடுவார். மிகவும் அழுத்தமான அவரது குரல் பலரையும் கவர்ந்தது. பாடும் போது எந்த அசைவும் இருக்காது. குரல் மட்டும் எழும்பி வந்து அரங்கை நிறைக்கும். அந்தக் குரலுக்கு உரியவர் பெயர் உமா வெங்கட்ராமன். எம்.ஏ. படித்த பெண். அமர்க்களமாகப் பாடுகிறாள் என்றெல்லாம் சொல்வார்கள். ஒரு கண்ணியமான தோற்றத்தில் என் வயது ஒத்தோருக்கு எல்லாம் அப்போது ஒரு தமக்கையைப் போல காணுவார். பாடலில் நெருடலான வரிகள் வந்தால் அதைப் பாடுவதைத் தவிர்த்து விடுவார். பின்னாளில் ரமணனை மணந்து கொண்டு உமா ரமணன் ஆனார். இவரைப் பின்னணிப் பாடகியாகத் தமிழ் திரை உலகம் வரித்துக் கொண்டது.  இவருடைய குரலுக்கும் திறமைக்கும் ஏற்றாற் போலவே பாடல்களும்  இவருக்கு அமைந்தன. ஆனந்த ராகம், பூங்கதவே தாள் திறவாய், தாகம் எடுக்கிற நேரம், ஆகாய வெண்ணிலாவே, நீ பாதி நான் பாதி என்று எத்த...

கல்யாணத் தேன் நிலா

  அப்பா அடிக்கடி சொல்வது உண்டு. திரை இசைப் பாடல்கள் இன்ன ராகம் என்று எல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று. மெய் தான். இசையமைப்பாளரின் கற்பனையில் சில போது ஓரிரு ராகங்களின் சேர்க்கையாக முடிவது உண்டு. பழைய திரை இசைப் பாடல்களில் ஓரு  ராகத்தின் அம்சம் முழுமை பெற்று ஒலிப்பதை அவர் குறிப்பிடுவார். அப்படி அவர் சொன்ன பாடல் சாருகேசி ராகத்தில் அமைந்த மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல். இது போன்று பல மிகப் பழமையான பாடல்கள் பற்றி அவர் சொன்னது உண்டு. பின்னிட்டு அப்பாவிற்கு சில திரை இசைப் பாடல்கள் பிடித்தமானதாக இருந்தது. எழுபது வயதை அவர் கடந்த பிறகு. கலப்படம் இல்லாத சுத்தமான ராக லட்சணத்தோடு அது அமைந்திருக்க வேண்டும். அதனால் தான் அவருக்கு அவை பிடித்துப் போயிருக்கும் என்று நான் கருதிக் கொண்டேன். அவரிடம் எதுவும் இதைப் பற்றிக் கேட்டதில்லை.  தொலைக்காட்சி பெட்டியில் இந்தப் பாடல் ஒலிக்கும் போது ஆஹா என்று அவர் ரசிப்பதைப் பார்த்து இன்புற்று இருக்கிறேன். அந்தப் பாடல் கல்யாணத் தேன் நிலா என்பது. சில பாடல்கள் கேட்க மிகவும் நன்றாக இருக்கும். பார்க்க முடியாது. இந்தப் பாடல் அப்படி இல்லை. பார்...

மலர்களின் நடனம்

நடனத்திற்குப் பிறகு (After the Dance) டால்ஸ்டாய் எழுதிய கதை. அதன் துவக்க வரியை மேலே பாருங்கள். இந்தக் கதையைச் சொல்பவர் இவான் வாஸிலிவிச். தனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் அப்போது பல்கலைக்கழக மாணவன். ,படிப்பு, பனிச்சறுக்கு விளையாட்டு, குதிரையேற்றம்,  நண்பர்கள், இளமை,கொண்டாட்டம் இவையே வாழ்க்கை. ஒரு சமயம் நடன விருந்துக்குச் செல்கிறார். பிரபுக்களும் படைத் தளபதிகளும் மாதர்களும் நிறைந்த அறை. காலரியில் இசைக்குழு. தின்பதற்கு ஏராளமாய் பண்டங்கள். நதி போல வழிந்து ஓடும் ஷாம்பெயின். ஆனால் இவான் வாஸிலிவிச்சுக்குக் காதலின் போதை மட்டுமே  ஏறியிருந்தது. காரணம் மெல்லிய தேகமும் உயரமும்,, இனிமையும் கனிவும் ததும்பும் கண்களும் உடைய வரின்கா. செலுத்தப் பட்டவர் போல் வலியச் சென்று அவள் கைகளைப் பற்றி நடனம் ஆட அழைக்கிறார். இணக்கத்தோடு அழைப்பை ஏற்ற வரின்கா அவரோடு இணைந்து ஆடுகிறாள். அறை முழுதும் பரவி சுழன்று சுழன்று ஆடுகிறார்கள். வெள்ளை உடை அணிந்த அவளது அண்மை வாஸிலிவிச்சை வேறு ஒர் உலகத்திற்கு இட்டுச் செல்கிறது. இடையினில் கைகளை வளைத்தும் தோள் மீது கை வைத்தும் சிறி...

ஒரு ராகம் பழகியது

  சரஸ்வதி சபதம் என்று ஒரு திரைப்படம். எனக்கு சுமார் ஒன்பது வயது இருக்கும் போது பார்த்தேன். பார்தததோடு முடிந்ததா? படத்தின் வசனம் பாடல்கள் எல்லாம் வீட்டின் பின்புறச் சந்தின் முனையிலிருந்து ஒலிக்கும். வசனம் பாடல் வரிகள் மெட்டு எல்லாம். ஓலிபெருக்கிக் குழாய் வழியாக. எல்லாமும் மனதில் ஏறிவிடும். பள்ளிப் பாடங்களை விட விரைவாக. வீதி விளையாட்டில் சற்றே ஈடுபட்டாலும் மனம் பாட்டிலேயே நிற்கும். கேட்டதை அப்படியே மெட்டு மாறாமல் பாடிப் பார்ப்பது ஒரு சுகம்.  அதில் ஓரு பாடல் தெய்வம் இருப்பது எங்கே என்று. பின்னிட்டு நான் வேலைக்கு வந்த போது உத்தமபாளயத்தில் தங்க நேர்ந்தது.  அழகான சிறிய ஊர். ஆறு ஓடும். பச்சை வயல்களைப் பார்க்கலாம். அங்கே நாங்கள் தங்கியிருந்த விடுதியில் அறைகள் என்ற பெயரில் புறாக் கூண்டுகள் உண்டு.  இருவர் தங்கும் கூண்டுகள். வசதியிருந்தால் தனிப் புறாக்கூண்டு. எல்லோருக்கும் குளியலறை பொது. தனியறையில் தங்கியிருந்த ஓருவரோடு நட்பு கூடியது. அவர் நல்ல இசை ரசிகர். அவரிடம் ஒரு டேப்ரிகார்டர் உண்டு. அதில் இருந்து பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கும். இரவு உணவு சீக்கிரம் முடிந்து விடும். அவர...

மேகங்களின் நிழலில்

  மலர் நள்ளிரவில் அவிழ்ந்து மணம் பரப்புகிறது.  அது ஒரு ரகசியம் வெளிப்படுவது போல் இருக்கிறது. இசை காதில் வந்து சேருகிறது. அதிலும் எத்தனையோ ரகசியங்கள்.   நேற்று ஒரு பாடலைக் கேட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு கேட்டேன். மீரா என்ற மிகப் பழைய திரைப்படத்தில் வரும் ஒரு பாடல். எழுபதுகளில் வந்த ஒரு ஹிந்தித் திரைப்படம். அதன் பெயர் ஷர்மிளி. மதுரையில் அந்தப் படம் வெளிவந்தது. ஷர்மிளி என்ற திரைப்படத்தின் தலைப்பை அழகாக “நாணமுள்ள நங்கை” என்று மொழிபெயர்த்து போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். அதில் ஒரு பாடல். மேகா சாயே ஆதீ ராத் என்று துவங்கும். மேகங்களின் நிழலில் பாதி இரவு என்று பொருள் கொள்ளலாம். நிழல்கள் என்ற திரைப்படத்தைப் பார்க்க நண்பர்கள் எல்லாம் விழுந்து அடித்து ஓடினார்கள். நான் சற்றுத் தாமதித்து விட்டேன். நான் பாரக்கும் போது அந்தப் பாடல் காட்சி இடம் பெறவில்லை.  அந்தப் பாடல் தூரத்தில் நான் கண்ட உன் முகம் . “தூக்கு மரத்தின் நிழலில்”என்று ஒரு தொடர்..  C.A. பாலன் எழுதியது. பிரபல வார இதழில் வந்தது.  அதை அடிப்படையாகக் கொண்டு எடுத்த படம் “இன்று நீ நாளை நான்”. மதுரையில் சென்ட்ரல்...

இல்லாதது ஒன்று

  காற்று காதில் ஓசையைக் கொண்டு வந்து சேர்க்கிறது. அந்த ஓசையில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அதற்கு ஒரு வடிவம் இருக்கிறது. வார்த்தைகள் சேர்ந்து ஒரு முறைமை அதற்கு வழங்கி வருகிறது. அது இசை என்று பெயர் கொள்கிறது. ராகங்களை வெறும் கேள்வி அறிவைக் கொண்டு அறிவது ஒரு வினோதமான அனுபவம். ராகங்களுக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. அது சுரங்கள் வழியாக வந்து சேருகிறது. அதற்கு ஒரு ஏறுமுகம் மற்றும் இறங்கு முகம் இருக்கிறது. இசையோ இலக்கணமோ அறியாத நிலையில் ஒரு ராகத்தை எப்படி அடையாளம் கொள்வது? கேட்டுக் கேட்டுப் பழகி அந்த ஓசையின் ஒழுங்கு பிடிபடுகிறது. ராகங்களுக்கும் பெயர் உண்டு தானே? கற்று உணர்ந்தவர்கள் சொல்லும் போது அந்தப் பெயர்கள் எல்லாம் புழங்கி வருகிறது. பெயரில் என்ன இருக்கிறது? இன்று ஒரு ராக ஆலாபனையைக் கேட்டேன். அதை நீங்களும் கேளுங்கள். இந்த ராகத்தின் பெயர் சிம்மேந்திர மத்யமம். எனக்கு எட்டு வயது இருக்கும் போது ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன். அது ஒரு ஓசை. அது ஒரு ஒழுங்கு. அந்தப் பாடலை வரிகளோடும் பாடியவரோடும் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் மீதும் தான் முதலில் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது.  பின்பு இசையை...

குரல்கள் தொடரும்

  நான் வேலைக்குப் சேர்ந்த புதிது. ஒரு புதிய திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் இரண்டு பஸ் மாறி கம்பம் செல்ல வேண்டி இருந்தது. கூட வேலை பார்க்கும் நண்பர்களுக்கும் சினிமா பார்ப்பதில் ஆர்வம் மிகுந்து இருந்தது. இளமை நுரைத்து வரும் பானமாக இருந்தது. எனவே எதிலும் பெரிய சிரமம் இல்லை. கம்பத்தில் கிரஸென்ட் என்று ஓரு தியேட்டர் இருந்தது. அங்கே "பகலில் ஒரு இரவு"என்ற படம் ரிலீஸ் ஆகியிருந்தது. ஸ்ரீதேவி நடித்த படம். எனவே எல்லோரும் போவது என்று முடிவாயிற்று. எந்தத் திரைப்படம் ஆனாலும் அதில் ஆழ்ந்து விடுவது எனது பழக்கம். இந்தப் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அது ஏற்கனவே பார்த்த படம் போலிருந்தது. ஆலிங்கனம் என்ற மலையாளப் படத்தின் மறு ஆக்கம் என்று புரிந்தது. என்றாலும் இந்தப் படத்தின் பாடல்கள் கேட்கும் போதே ஒரு மாறுபட்ட உணர்வைத் தந்தது. "இளமை என்னும் பூங்காற்று" என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. பின்னும் ஒரு பாடல். அதைக் கேட்டு அசந்து போனேன். ஒரு பாடலின் பல்லவிக்கும்  சரணத்திற்கும் ஊடே வரும் இசை வெறும் குரல்களாக மட்டுமே இருக்க முடியுமா? முடியும் என்று காட்டியிருந்தார் இளையராஜா. இசையமை...

அழிவற்ற என் அன்பே

  அவன் மேகங்களை விரும்பினான். மலர்களை நேசித்தான். இயற்கையிடம் அடி பணிந்தான். மனிதர்களை விட மரங்கள் அவனுக்குப் பிடித்தது. மரங்கள் அவனோடு பேசுவதாக நம்பினான். அவை பேசும் மொழியைக் கடவுளின் மொழி என்று கருதினான். உன்னதமான இசைக் கோவைகளை இந்த உலகிற்கு வழங்கினான். அவன் பெயர் பீத்தோவன். பீத்தோவனின் வாழ்க்கை துயரங்கள் நிரம்பியது. குடிகாரத் தகப்பன். சம்பாதித்ததை எல்லாம் குடித்தே அழித்து விடுவான். எனவே பீத்தோவன் இளமையிலேயே குடும்பப் பொறுப்பை சுமக்க நேர்ந்தது.  தன்னுடைய பதினேழாம் வயதில் தாயை இழந்தார். சிறு வயதிலிருந்தே தந்தையால் இசைப் பயிற்சிக்காக நிர்ப்பந்திக்கப் பட்டார். இசை அவர் மீது திணிக்கப்பட்டாலும் ஓருபொழுதும் அவர் இசையை வெறுக்க வில்லை.  ஒரு கட்டத்தில் அவர் வசித்து வந்த பான் நகரிலிருந்து வியன்னாவிற்கு குடி பெயர்ந்தார். ஆனாலும் தான் வளர்ந்த, துயரச் சூழல்களைச் சந்தித்த பான் நகரம் அவர் நினைவை விட்டு அகலவே இல்லை.  ரைன் நதி, அது தழுவிச் செல்லும் கரைகள், தேவாலயங்கள், ஏன் கல்லறைகளும் கூட அவர் நினைவில் கிடந்தன.  பான் நகரத்தில் அவரது வாழ்க்கையின் முதல் இருபது ஆண்டுகள் கழிந்தன. ...

எங்கேயோ ஏதோ

 சில பாடல்கள் துள்ள வைக்கும். சில அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும். சில பாடல்கள் நமது நிம்மதியை ஒரேயடியாகக் குலைத்து விடும்.  ஒரு ஏக்கம் வந்து மெல்லத் தழுவிக் கொள்ளும். அப்படி ஒரு பாடலை சமீபத்தில் கேட்க வாய்த்தது. இந்த வாய்ப்பு அமையக் காரணம் தம்பி சேகர். ஓரு காலத்தில் கேட்டு காலப் போக்கில் நினைவிலிருந்து நழுவிய அந்தப் பாடலை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தான். நதியைத் தேடி வந்த கடல் என்று ஓரு திரைப்படம். மகரிஷி என்பவர் எழுதிய கதை திரைப்படம் ஆகி இருந்தது. இந்தப் படத்திற்கு இசை இளையராஜா.  துவக்க இசையைக் கேளுங்கள். முடிந்தவுடன் எங்கேயோ என்று வந்து சேரும் சுசீலாவின் குரலைக் கேளுங்கள். இந்தப் பாடல் சுநாத வினோதினி என்ற ராகத்தில் அமைந்திருக்கிறது. சிவரஞ்சனியோ அல்லது ஹம்சாநந்தியோ என்று குழம்பி விட்டு பின்பு சுநாத வினோதினி என்று தீர்மானம் செய்ய நேர்ந்தது. 

கரையேற வேண்டாமா

  சமீபத்தில் ஒரு பாடலைக் கேட்டேன். அது பெரியசாமி தூரன் எழுதியது. இந்தப் பெயரை நம்மில் அநேகர் கேட்டிருப்போம். இவர் எழுதிய எளிமையான பாடல்கள் ஆரம்பப் பள்ளிக் கால தமிழ் பாட நூல்களில் படித்த ஞாபகம் இருக்கிறது. குறிப்பாக நத்தையாரே நத்தையாரே அத்தை வீடு பயணமா என்ற பாட்டு. ஞாபகம் வருகிறதா? அத்தை வீடு போக முதுகில் தண்ணீர்க் குடம் வேணுமோ என்று அடுத்த வரி மனதில் தோன்றுகிறதா? சரி. நான் கேட்ட பாடலுக்கு வருகிறேன். அது கரையேற வேண்டாமா என்ற பாடல். டி.எம். தியாகராஜன் என்ற கர்நாடக இசைப் பாடகர் பாடியிருந்தார். இந்தப் பாடல் அமைந்த ராகம் ரசிக ரஞ்சனி என்று கண்டிருந்தது. நான் கர்நாடக இசையைப் பயின்றவன் அல்ல. நிறையக் கேட்டிருக்கிறேன். கற்றலிற் கேட்டலே நன்று என்பது வேதம் அல்லவா?   எனது சிறு வயதில் சங்கீதம் வானொலிப் பெட்டியிலிருந்து பெருகி வரும். அப்பா அதைக் கேட்டுக் கொண்டிருப்பார். சில சமயம் கண்ணாடி அணிந்த  அவர் கண்களில் நீர் நிறைந்து இருக்கும். ஆஹா என்று ஒரு அனுபூதியில் திளைத்து இருப்பார். அந்தக் காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருக்கும்.   கேட்டுக் கேட்டுப் பழகிய மனம் இது இன்ன ராகம் என்று ...

உருகிடும் வேளையிலும்

  தாகம் என்று ஒரு திரைப்படம் 1974 ம் வருடம் வந்தது. மதுரையில சிந்தாமணி தியேட்டரில் ரிலீஸ் ஆனதாக ஞாபகம். முத்துராமன் மற்றும் நந்திதா போஸ் நடித்திருந்தனர். தமிழில் அது ஒரு சோதனை முயற்சி. மதுரை திரைப்பட ரசிகர்கள் அதை தங்களுக்கு ஏற்பட்ட பெரும் சோதனையாகக் கருதினர்.  விளைவு. படத்தை மூன்று நாட்களுக்கு முன்னாலேயே தூக்கி விட்டார்கள். முத்துராமன் பார்வையற்றவராக நடித்திருந்ததாக அறிந்தேன். எங்கள் கல்லூரி நூலகத்தில கணையாழி, தீபம் போன்ற பத்திரிக்கைகள் படிக்கக் கிடைக்கும். இந்தப் படத்தைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள். நந்திதா போஸ் டவுன் பஸ்ஸில் செல்லும் காட்சியில் அவர் மேல் படர்ந்து விலகும் பார்வைகளை எப்படி காமிரா மூலம் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள் என்று சொல்லி இருந்தார்கள். ஒரு பஸ் காட்சியில் காமிரா இப்படி புகுந்து புறப்படுவது அப்போதெல்லாம் பெரிய விந்தை.  இந்தப் படத்தை ஓரு இளைஞர் பார்த்தார். ஒரு காட்சியில் பஸ் சன்னலோரம் அமர்ந்திருக்கும் நந்திதா போஸின் ஒற்றை முடி காற்றில் பறக்கும். இந்த் காட்சியால் உந்தப் பட்டு திரைப்பட இயக்குநர் ஆக விரும்பினேன் என்று சொன்னா...

எனைத் தேடும் மேகம்

  மேகம் அலைந்து கொண்டிருக்கும். அது என்ன தேடும்? மனம் அலைந்தபடியே இருக்கும். அது எதைத்தான் நாடும்?  கவி மனம் மேகத்தோடு பேசுகிறது.  மேகத்தைத் தூது விடுகிறது.  மேகத்தோடு விளையாடுகிறது. மேகம் தன்னைத் தேடுவதாகக் கற்பனை செய்கிறது.  சின்னச் சின்ன மேகம் தொட்டுப் பேசுவது போல உணருகிறது.  மேகம் விட்டு விலகிச் செல்லும் போது சோகம் கொள்கிறது. எண்பதுகளில் வந்த ஒரு பாடல் இப்படி எல்லாம் நினைவுகளைக் கிளறி வேடிக்கை பார்க்கிறது. இசை சங்கர் கணேஷ் இரட்டையர். கேட்கலாம்

என் உள்ளில் எங்கோ

  பிள்ளைப் பருவத்திலே என்னைப் பேண வந்த ஒரு குரல். இப்படித்தான் வாணியின் குரலைச் சொல்ல வேண்டும். குரல் இனிமையானது. அழுத்தம் கூடியது. தெளிவான உச்சரிப்பு. அது எந்த மொழியாக இருந்தாலும். நல்ல ஞானம். பயிற்சி. ஹிந்துஸ்தானி இசையும் அதில் அடக்கம். எல்லா விதமான பாடல்களையும் சரளமாக மிகைத் தன்மை இன்றிப் பாடிச் சென்றிருக்கிறார்.  பாடல் வரிகளின் பொருள் உணர்ந்து பாடிச் சென்றிருக்கிறார். அது தனியாகப் பாடினாலும் இணைந்து பாடினாலும். வாணி தனியாகப் பாடிய பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். ஆகாயம் மழை பொழிஞ்சா மண்ணுலகில் இன்று தேவன் நாதம் என்னும் கோவிலிலே நீராட நேரம் நல்ல நேரம் என் உள்ளில் எங்கோ என் கல்யாண வைபோகம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பெண்மை தன் நிலையைப் பெரிதும் பேசுவதில்லை. அது உள்ளத்தில் எங்கோ கிடக்கிறது. ஆற்றாமையாக,  தேடலாக,கொண்ட தனிமையாக தவிப்பாக,   இப்படி எல்லாமும் உள்ளே இறுகிக் கிடக்கிறது. தண்ணென்ற நீரில் கிடக்கும் கல்லைப் போல.  மற்றவர்கள் மீது காட்டும் பரிவும் சின்னச் சின்ன அக்கறைகளும் மெல்லச் சுரந்தபடியே இருக்கிறது. வாணியின் குரல் பெண்மையின் உணர்வுகளை மெல்ல மெல்ல ...

காலையும் நீயே

  அந்தப் பாடலை சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். வானொலிப் பெட்டியிலிருந்து மெல்லக் கசிந்து வரும் அந்தப் பாடல். ஒரு மென்மையான ஆலாபனை சந்தனத்தை இழைத்தது போல. அது என்ன குரல்! என்னமாய் மனதை வருடுகிறது! பின்பு ஜல். ஜல்..ஜல்..ஜல்..ஜல்ஜல்.. என்று சலங்கையின் ஓசை. காலையும் நீயே மாலையும் நீயே என்று ஒரு மென்குரல் மனதை மயக்கும். பின்பு ஒரு தேன் குரல் பதில் போல மிழற்றும். ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு பருவத்திலும் இந்தப் பாடலைக் காது கொடுத்து கேட்பது ஒரு புது அனுபவம் தான். மேலே சொன்ன பாடல் தேன் நிலவு என்ற திரைப்படத்தில் வரும். 1962 ம் வருடம் இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. ஸ்ரீதர் இயக்கம். ஏ எம். ராஜா இசையமைத்து பாடியிருந்தார். உடன் பாடியவர் எஸ்.ஜானகி.  பல வருடங்கள் கழித்து மறு முறை வெளியான போது இந்தப் படத்தைப் பார்த்தேன்.  அப்போது தான் நான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தேன். .பாடல் காட்சியில் வைஜயந்தி மாலா ஆடுவார். நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். பாலில் விழுந்த பழங்களைப் போலே என்று ஒரு வரி இந்தப் பாடலில் வரும்.  பாலைக் கறப்பது போல் அபிநயித்து ஒரு குவளையில் நிரப்புவதைப் போல...