Skip to main content

Posts

Showing posts from September, 2022

காலையும் நீயே

  அந்தப் பாடலை சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். வானொலிப் பெட்டியிலிருந்து மெல்லக் கசிந்து வரும் அந்தப் பாடல். ஒரு மென்மையான ஆலாபனை சந்தனத்தை இழைத்தது போல. அது என்ன குரல்! என்னமாய் மனதை வருடுகிறது! பின்பு ஜல். ஜல்..ஜல்..ஜல்..ஜல்ஜல்.. என்று சலங்கையின் ஓசை. காலையும் நீயே மாலையும் நீயே என்று ஒரு மென்குரல் மனதை மயக்கும். பின்பு ஒரு தேன் குரல் பதில் போல மிழற்றும். ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு பருவத்திலும் இந்தப் பாடலைக் காது கொடுத்து கேட்பது ஒரு புது அனுபவம் தான். மேலே சொன்ன பாடல் தேன் நிலவு என்ற திரைப்படத்தில் வரும். 1962 ம் வருடம் இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. ஸ்ரீதர் இயக்கம். ஏ எம். ராஜா இசையமைத்து பாடியிருந்தார். உடன் பாடியவர் எஸ்.ஜானகி.  பல வருடங்கள் கழித்து மறு முறை வெளியான போது இந்தப் படத்தைப் பார்த்தேன்.  அப்போது தான் நான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தேன். .பாடல் காட்சியில் வைஜயந்தி மாலா ஆடுவார். நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். பாலில் விழுந்த பழங்களைப் போலே என்று ஒரு வரி இந்தப் பாடலில் வரும்.  பாலைக் கறப்பது போல் அபிநயித்து ஒரு குவளையில் நிரப்புவதைப் போல...

கடைசி இலை

  பள்ளி இறுதி வகுப்பில் பாடப் பகுதியாக ஒரு கதை வந்தது. அதன் தலைப்பு "கடைசி இலை" (The Last Leaf) .O.ஹென்றி எழுதிய கதை. ஹென்றியின் கதைகளில் ஒரு இறுதித் திருப்பம் இருக்கும். அது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும். இரண்டு பெண்கள். ஜான்ஸி மற்றும் ஸ்யூ. அவர்கள் ஒரு வீட்டின் மாடியில் வசிக்கிறார்கள். பிழைப்புக்கான ஓவியமும் பிடித்தமான உணவு வகைகளும் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கிறது. நகரில் நிமோனியா காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. ஜான்ஸிக்கு நிமோனியா காய்ச்சல் கண்டு விடுகிறது. டாக்டர் வந்து சிகிச்சை செய்கிறார். அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறார்.  உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. டாக்டர் ஸ்யூவை  தனியே அழைத்துப் பேசுகிறார். நான் மருந்து தரலாம். அது உடலுக்கு மட்டுமே. நோயாளிக்கு வாழும் இச்சை இல்லை. அது இருந்தால் நோய் குணமாகும். சத்தான உணவுகளைக் கொடு என்று சொல்லி விடைபெறுகிறார். ஸ்யூ படுக்கையில் இருக்கும் ஜான்ஸியைப் பார்க்கிறாள். எத்தனை மெலிந்து விட்டாள். கை கால் முகமெல்லாம் வெளிறியிருந்தது. அவள் குரல் மெலிதாக ஒவித்துக் கொண்டிருந்தது. பன்னிரண்டு.. பதினொன்று… அவள் வாய் முணுமுணுக்...

கண்கள்

" கண்கள் சிவந்து பெரியவாய்" என்றார் நம்மாழ்வார்.  எம்பெருமானுடைய பெரிய கண்களைச் சொல்லுகிறார். விடுதலை பெற்ற ஜீவன் முக்தர்களுடைய கண்ணும திருமாலுடைய கண்களைப் போலவே இருக்கும். தாமரைப் பூவைப் போல கண் வேண்டும் என்பர். திறந்த பார்வை வேண்டும். மூடின கண் மறைந்த ஒளியைக் காட்டுகிறது. யோசிக்க கண்மூடி ஜபம் பண்ணுகிறானே அதை நான் சொல்லவில்லை. ஸாமான்ய ஜனங்கள் கண்ணை முழுதும் விழித்துப் பார்க்காமல் அரைப் பார்வையும் கோணற் பார்வையும் பார்க்கும்படி செய்கின்ற அஞ்ஞானத்தையும் பயத்தையும் பழிக்கிறேன். இது நிற்க. நான் சென்னப்பட்டணத்தில் இருந்த போது ஒரு சாமியாருடன் ஸ்நேகப்பட்டேன் அவர் சுதேசியம்  அன்னிய வஸ்து பகிஷ்காரம்,  ஸ்வராஜ்ய ஸ்தாபனம் என்ற விஷயங்களைப் பற்றி ஆத்திரத்தோடு பேசுவார். அவர் கண்களை இமைக்காமலே நெடுநேரம் இருப்பார். மனிதர் இமைக்காமலே இருந்து விடலாம் என்று அந்தச் சாமியார் சொல்லுவதுண்டு. அது நல்ல பழக்கம். ஸூர்யனைப் பார்த்துக் கொண்டிருந்தால் ஞானதிருஷ்டி உண்டாகும். கண்ணில் வீரம் ஏற்படும். ஸாதாரணமாக இருவருடைய கண்கள் ஸந்தித்தால் "இவன் ஏனடா நம்மை முறைச்சுப் பார்க்கிறான்?" என்கிற எண்ணம் இரு...

அப்பா

   அந்தக் குழந்தை கூடையில் படுத்திருந்தது. வெள்ளை நிறக் குல்லாய் அணிந்திருந்தது. கூடை புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு பனி நீல ரிப்பன்களும் நீல மெத்தையும் கொண்டு விளங்கியது. மூன்று குட்டிச் சகோதரிகள் மற்றும் அப்போதுதான் படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்த அம்மா, பாட்டி எல்லோரும் குழந்தையைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள் அது விழிப்பதையும் மூடிய பிஞ்சுக் கைகளை உயர்த்தி வாயில் வைத்துக் கொள்வதையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தை புன்னகைக்க வில்லை; சிரிக்க வில்லை. அவ்வப்போது கண்களைச் சிமிட்டியது. சிறுமிகளில் ஒருத்தி மோவாயை நிமிண்டும் போது உதடுகள் வழியாக நாக்கை முன்னும்  பின்னும் அசைத்துக் கொண்டிருந்தது. அப்பா சமையலறையில் இருந்தார். சிறுமிகள் குழந்தையுடன் விளையாடுவது அவருக்குக் கேட்டது. "பாப்பாவுக்கு யாரைப் பிடிக்கும்?" பிலிஸ் குழந்தையின் மோவாயை நிமிண்டியபடி கேட்டாள். பிலிஸ் தொடர்ந்தாள். "அவனுக்கு எல்லோரையும் பிடிக்கும். ஆனால் நிஜத்தில் அப்பாவைத் தான் பிடிக்கும். அப்பாவும் ஒரு பையன் இல்லையா?" பாட்டி படுக்கையின் விளிம்பில் இருந்தபடி சொன்னாள்"அவனுடைய சின்னக் கைகளையும...

8 செப்டம்பர்

 இன்று 8 செப்டம்பர். "8 செப்டம்பர்" என்ற தலைப்பிலேயே பாப்லோ நெருடா ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அந்த நாளுக்கு என்ன முக்கியத்துவம் என்று தெரியவில்லை. ஆனாலும் இந்தக் கவிதையை மொழி பெயர்த்தேன். 8 செப்டம்பர்  இன்று,  இந்த நாள், நிரம்பி வழியும் கோப்பை இன்று, இந்த நாள், பெருகி  வரும் அலை இன்று எல்லாமே ஒரு ஒட்டு மொத்த பூமிப் பரப்பு இன்று  புயற் கடல் ஒரு முத்தத்தால்  நம்மை உயர்த்தியது எத்தனை உயரம்! நாம் நடுங்கி விட்டோம் மின் வெட்டும் பொழுது.. கட்டப் பட்டவர்களாய்  நாம் கீழே கீழே சென்றோம்  கட்டு அவிழாமல் மூழ்குவதற்கு  இன்று நமது உடல்கள் அகண்டு பெரிதாகின  உலகின் மூலை வரை வளர்ந்தன உருண்டன, உருகின.. ஒரு மெழுகின் சிறு சொட்டாக  விழுகின்ற ஒரு எரி நட்சத்திரமாக  நம் இருவருக்கும் இடையில் ஒரு கதவு திறந்தது யாரோ முகமற்றவர்  நமக்காக அங்கே காத்திருந்தார் பாப்லோ நெருடா தமிழில் தி சந்தானம்

அடி பெண்ணே----

  முள்ளும் மலரும் தொடர்கதையாக வந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து திரைப்படமாக வந்தது. மகேந்திரன் படத்தை இயக்கி இருந்தார். லசனகர்த்தாவாக அறியப்பட்ட மகேந்திரனின் முதல் படம். மகேந்திரனின் திரைக்கதை நறுவிசாக இருந்தது. மூலக் கதையிலிருந்து சில பகுதிகளை அழகாகச் செதுக்கி விட்டிருந்தார். உமா சந்திரன் எழுதிய முழுக் கதையும் மகேந்திரன் படிக்கவில்லை என்று சொல்பவர்கள் உண்டு. எது எப்படியோ கதை அருமையாகக் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது.  வசனங்கள் மிகவும் குறைவு. பத்து வயதில் தொடர்கதையைப் படித்திருந்த எனக்கு  இருபது வயது ஆகியிருந்தது. காண்பனவற்றில் எல்லாம் அழகைக் காண்கின்ற வயது. மனதில் கவிதை ஊறித் ததும்பும் பருவம். இந்தப் படத்தைப் பார்த்து பரவசம் அடைந்தேன். பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு கவிதை. சிருங்கேரி என்ற இடத்தின் அழகு கண் முன்னே விரியும். கண்ணாடி போன்ற நீரில் மீன்கள் துள்ளி விளையாடும். கரையைத் தொட்டுத் தொட்டு செல்லும். மலர்க் கூட்டங்கள் மனதில் உவகை பெருகச் செய்யும். மழையில் சாலை நனைந்து இருக்க வானில் எறியப்பட்ட வானவில் மனதை மயக்கும். வளைந்து செல்லும் பாதையில் ஆட்டு மந்தை குறுக்கிடும்....

முள்ளும் மலரும்

  பதின் வயதில் வாரப் பத்திரிக்கைகள் படிக்கக் கிடைக்கும். அதில் வரும் கதைகளைப் படிப்பது சுவாரசியமாக இருக்கும். கதைகளோடு அதற்காக வரைந்த ஓவியங்களும் மனதில் தங்கி விடும். ஜெயகாந்தனின் கதைகள் எனக்கு அறிமுகமானது விகடன் பத்திரிக்கை மூலமாகத்தான்.  குறிப்பாக சீசர் என்ற அவரது கதையைப் படித்ததும் அதற்கான கோபுலுவின் ஓவியமும் இன்றளவும் நினைவில் இருக்கிறது. ஆனால் நான் இங்கே சொல்லப் போவது உமாசந்திரன்  எழுதிய கதையைப் பற்றி. அது கல்கி பத்திரிக்கையில் தொடராக வந்தது. முள்ளும் மலரும் தான் அந்தக் கதை. அப்போது எனக்குப் பத்து வயது இருக்கும். வாரப் பத்திரிக்கை வந்த உடன் அதைக் கைப்பற்ற பெரும் போராட்டமே நடக்கும். ஒருவாறு கையில் கிடைத்தவுடன் பெரும் ஆர்வத்தோடு படிப்பது உண்டு. விஞ்ச் என்ற ஒன்றைப் பற்றி நான் அறிந்தது கொண்டது இந்தக் கதையைப் படித்த போது தான். அதை இயக்கும் காளியண்ணன் தான் இந்தக் கதையின் நாயகன். முரட்டு சுபாவம் கொண்டவன். அவனுடைய தங்கை வள்ளியிடம் கண்டிப்பும் பாசமும் காட்டும் மனிதன்.  இருளர்கள் இருக்கும் முள்ளிமலைப் பகுதிக்கு அவ்வப்போது செல்வான். அந்த எளிய மனிதர்களோடு அன்பு பாராட்டுவான்...