நேற்று கூரியரில் ஒரு பார்ஸல் வந்தது. அது எதிர் வீட்டுக்கானது. அவர்கள் எல்லோரும் ஊருக்குப் போய் விட்டார்கள். கூரியர்காரர் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினார். திறந்தேன். என்னிடம் அலைபேசியை நீட்டினார். பேசியவர் எதிர் வீட்டு மனிதர். பார்ஸலை வாங்கி வைத்திருக்குமாறு வேண்டினார். அளவில் பெரிய அந்த பார்ஸல் எனது வீட்டில் நிறைய இடத்தை எடுத்துக் கொள்ளுமே என்று கவலைப் பட்டார். பரவாயில்லை நான் வாங்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். “I think we have enough space in our heart for each other”. இந்த வார்த்தையை நான் சொல்லவில்லை. ஏனென்றால் இருபது மணி நேரம் கழித்துத்தான் இந்த வார்த்தை தோன்றியது. போகட்டும். நான் அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தாவது சொல்லியிருக்கலாம். மறந்து போனேன். பிரியமோ வாழ்த்தோ அப்போதைக்கப்போது சொல்லி விடுதல் உசிதம். தேவகுமாரன் தொழுவத்தில் பிறந்தார். ஊர் விட்டு இந்த ஊர் வந்தனர் அவரது அன்னையும் பிதாவும். கடுங்குளிர். எங்கும் இடம் இல்லை. தொழுவம் தான் கிடைத்தது. முன்னதாக ஒரு தேவதை அன்னை மேரியின் முன்னே தோன்றி உனக்கொரு மகன் பிறப்பான். அவனே யூதர்களின் ராஜா....