பர்மா தற்போது மியான்மர் என்று அழைக்கப்படுகிறது. அதன் தலைநகர் ரங்கூன் தற்போது யாங்கே என்று அழைக்கப்படுகிறது. இந்த ரங்கூன் ஒரு திரைப்பட நடிகரின் திரை வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர் சிவாஜி கணேசன். அது அவருடைய முதல் படம். பராசக்தி. ஓரு அழகான மாடுலேஷனில் ரங்கூன் என்ற பெயர் அவர் வாயில்புகுந்து புறப்படும். தமிழன் பிறக்க ஓரிடம் பிழைக்க ஓரிடம் என்று பரிகாசக் குரலில் சொன்ன பின்பு ரங்..கூன் என் உயிரை வளர்த்தது என்பார். சகோதரர்கள் மூவரும் பிழைப்புக்காக பர்மா சென்று வசிக்கிறார்கள். அதுவும் இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பகுதி. தமிழ் நாட்டில் தங்கைக்குத் திருமணம். சகோதரர்கள் வர இயலாத நிலை. காரணம் பர்மாவின் மீது ஜப்பானின் தாக்குதல். குண்டுகள் பொழிவு ஆரம்பம். கப்பலில் ஒரு டிக்கெட் தான் கிடைக்கிறது. எல்லோருக்கும் இளையவனான குணசேகரனை பெரும் பொருளோடு அனுப்பி வைக்கிறார்கள். போர் சூழ்நிலையின் காரணமாக கப்பல் மிகவும் தாமதமாக சென்னை வருகிறது. குணசேகரன் ஹோட்டலில் தங்கும் போது உடமைகளையும் பொருளையும் இழக்கிறான். பித்தனைப் போல் நடித்துத் திரிகிறான். ...