கீதாஞ்சலி பதின்பருவத்துப் பெண். வாழ்வதின் சத்தியத்தையும் துடிப்பையம் ஒரு சங்கீத அலையாய் தனக்குள் உணர்ந்தவள். சகல சாத்தியங்களும் நம்பிக்கைகளும் அவளுக்குள்ளே கிளர்ந்து எழுகின்ற பருவம்.. ஆனால் விதிபொல்லாதது ஆயிற்றே? அவளுக்கு மூளையில் புற்று நோய் என்று கண்டு அறியப்படுகிறது. நோயின் வலியும் சிகிச்சையின் வேதனையும் அவளைப் பற்றுகிறது. சாவு மெல்ல மெல்ல நெருங்குவதை உணருகிறாள் தனிமையும்தூக்கமின்மையும் அவளை வாட்டுகிறது. அவள் எழுதுகிறாள. கிடைத்த காகிதங்களில் எல்லாம் எழுதுகிறாள். எல்லாம் கவிதைகளாய் எழுதுகிறாள்.
நோயையும் மரணத்தையும் கவித்துவத்துடன் எதிர் கொண்ட இந்த இளம்
கொடியைப் பற்றி அருண் சத்தா ஒரு அற்புதமான டாகுமண்டரிப் படம்
எடுத்திருக்கிறார்.
கீதாஞ்சலியின் கவிதைகளின் தமிழாக்கம் இதோ
1
துயிலே!
நாம் கடைசியாக என்று பார்த்தோம்?
நீ யாரோ ஆகி விட்டது போல் தான் தெரிகிறது
இதோ கொஞ்ச நாள் முன்புதான்
நீ எத்தனை நெருக்கமாய் இருந்தாய்?
என் அருகணைந்து கையழைத்து
தூரத்து மலைகளோரம் சென்றாய்
என் கனவுகளில் குடில் அமைக்கவும்
உதவினாய்
எல்லாம் அந்நியமாகிப் போனது
இப்பொது
நீயும் கூடத்தான்
எத்தனை மென்மையான எண்ணங்களை
நானும் நீயும் பகிர்ந்தோம்
எனக்கு இப்போது எஞ்சியது
ஞாபகங்கள் மட்டும்
சில போது சில வார்த்தைகள் மட்டும்
பழைய நாட்களை ஒலிப்பதாய்
ஒரு தாலாட்டாய்
ஒரு பரிவான முத்தமாய்..
நான் இப்போது
இந்த இருட்டில் விழித்தபடி
தனியளாய்..
துயரம் மிகுந்த கண்களுடன்
ஒரு சில நேரம்
நான் தூங்கவும் செய்கிறேன்
ஆனால்
என் கனவுகள் மட்டும்
எங்கோ எட்டாத தொலைவில்
2
எனது உயிராகிய மெழுகுச் சுடர்
எழுகிறது
அடங்குவதற்கு முன்
என்னுடைய முடிவு எப்போது
நான் அறியேன்
மெய்தான்
நான் எனக்காக வருந்துகிறேன்
ஆனால்-- சாவே!
நான் அறியாத நண்பனே!
நான் குதூகலிக்கவும் செய்கிறேன்
உன்னை நினைத்து
என் கண்களின் ஒளி
உனதாகும் அல்லவா?
இப்படித்தான்
அடங்கும் என் ஆன்மா முனகுகின்றது
என் போன்ற நல்ல நண்பர்கள்
உனக்கு வாய்ப்பராக!
இதுவே என் வேண்டுதல்
பக்குவம் கொண்ட மனம் மரணத்தையும் நண்பனாகவே பார்க்கும்.
தி சந்தானம்
நல்ல கவிதை. ஆனால் சற்று வருத்தமாக இருந்தது.
ReplyDeleteஆமாம். மனம் கனத்திருக்கும்
Delete