Skip to main content

பால் போல ஒரு பாடல்

 சில பாடல்கள் பிடித்து விடுகிறது.. இசையோ குரலோ எதுவோ பிடித்து விடுகிறது. நமக்கு சிலரைப் பிடிக்கும். அவருக்கு ஒரு பாடல் பிடித்தால் நமக்கும் பிடித்து விடும். பத்து பனிரெண்டு வயதில் நமது விருப்பங்கள் அப்படித்தானே?  என்னுடைய தாய் மாமனுக்கு அந்தப் பாடல் பிடிக்கும்.

அது எந்தப் பாடல்? சொல்கிறேன். “மாமன்மார் மூவர் தம்பி” என்று அம்மா

அடிக்கடி பாடுவார். எனக்கு அன்பான மூன்று மாமன்கள். அவர்களில்

எல்லோருக்கும் இளையவருக்குத்தான் நான் சொல்லப் போகும் பாடல்

பிடிக்கும். மாமா மதுரைக்கு வருவார். வருடத்தில் ஓரிரு முறை. பூனைக்குட்டிகளைப் போல் அவரைச் சுற்றிச் சுற்றி வருவது எங்கள் வழக்கம். தின்பதற்கு வாங்கி வந்ததைத் தருவார். அப்படி  ஒருமுறை வந்த சமயம் பாடல் எங்கோ ஒலித்தது. அது “பால் போலவே “என்று தொடங்கியது. மாமா ஒரு கணம் காதில் வாங்கினார். அந்தப் பாடல் வந்த திசையை நோக்கி நடந்தார்-வழக்கம் போல நானும் அவர் பின்னால் நடந்தேன்- பாடல் முழுதும் கேட்டு ரசித்தார். நானும்.



பாடல் காட்டிய உணர்வுகளோ இசை நுணுக்கமோ அப்போது புரியவில்லை.-

இப்போது கொஞ்சம் புரிகிறது. கேட்டால் இனிக்கிறது. மலையில் அந்தப் பெண்

பாடுகிறாள். பனி மூட்டத்தின் நடுவே பாடுகிறாள். தனது தலைவனை எண்ணிப் பாடுகிறாள். தன் தனிமையை உணர்ந்து பாடுகிறாள். தென்றலோடும் நிலவோடும் கிளக்கிறாள். “பால் போலவே” என்று குரல் உயர்ந்து எழுகிறது.

நாளை இந்த வேளை பார்த்து ஒடி வா நிலா. என்று பாடியதும் புல்லாங்குழல்

கனிந்து ஒலிக்கிறது. என்ன சொல்வது?  பாரதியின் வரிகள்தான் நினைவில்

வருகிறது.


குன்றி னின்றும் வருகுவதோ?-மரக்

கொம்பினின்றும் வருகுவதோ?-வெளி

மன்றினின்று வருகுவதோ?-என்தன்

மதி மருண்டிடச் செய்குதடி


உண்மை. மதி மருண்டுதான் போகிறது. "காதினில் அமுது நெஞ்சினில் நஞ்சு." உணர்ந்து பாடுகிறார் சுசீலா அம்மையார். நயமான தமிழ் வரிகளை. இத்தனைக்கும் இவர் தாய் மொழி தெலுங்கு. நல்ல இசைக் கோவை. மறக்க முடியாத பாடல்.-


"மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்" என்று ஒரு வரி இந்தப் பாடலில் வரும். கண்ணன் நடந்த பாதையில் என் கால்கள் சென்றது 
நினைவில் வரும். கண்ணன் என்பது மாமாவின் பெயர்.

பாடலைக் கேட்கலாம்.






Comments

  1. என்னுடைய ஐந்து வயதில் வரத மாமா தலை வாரி சிண்டு போட்டு விட்டு, பொட்டு வைத்த முகமோ பாடியதும், பல சமயங்களில்அஞ்சாறு ரூபாய்க்கு மணி மாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி பாடியதும் ஆயிரம் தடவையாவது குழந்தைகள்ட்ட சொல்லிருப்பேன். கடைசி வரை மாமாகிட்ட, அஞ்சாறு ரூபாய்க்கு மணி மாலை கேட்டுருக்கேன். சிரிச்சுண்டே போவா. ரொம்ப எமோஷனல் ஆக்கிட்ட பழய நினைவுகளைத் தோண்டி..

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அப்படியே. பல நினைவுகள் பாசக்காரர்களைப் பற்றி.

      Delete
  2. பாட்டு மட்டுமா, நடிகர்களப் பிடிக்கறதுலாமும் பெரியவங்களப் பாத்துதான். நம் வீட்டு தாக்கத்தால், இன்று வரை ஒரு எம் ஜி ஆர் படம் தியேட்டரில் பாத்ததில்லை. டீவியில் மற்றவர் பார்க்கும் போது அங்கு இருந்தால் ஐந்து பத்து நிமிடம் அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. முக்ய காரணகர்த்தா அண்ணா. ஆனா அம்மா எம்.ஜி.ஆர் படமும் பார்த்திருக்கா. அம்மாக்கு மசாலாவும் பிடிக்கும்.

      Delete
  3. எனக்கு என் அண்ணா குமார் ஞாபகமாக இந்த பாடல் பிடிக்கும்.
    முத்துக்கு முத்தாக
    சொத்துக்கு சொத்தாக
    அண்ணன் தம்பி
    பிறந்து வந்தோம்

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருவருககும் ஒரு ஞாபகம். பாசம் தீர்ந்து விடுமா என்ன?

      Delete
  4. நல்ல பாடல், நல்ல எழுத்து ��

    ReplyDelete
  5. அற்புதமான பாடல் பி சுசீலாவின் உச்ச ஸ்தாயில் மனதை கிரங்க அடிக்கும் இசை சொல்லவும் வேண்டுமோ
    சிவாஜி மூன்றெழுத்து
    MSV மூன்று எழுத்து
    AVM மூன்றெழுத்து

    ReplyDelete
    Replies
    1. நன்றி கண்ணன். மூன்று எழுத்தாக அடுக்கி விட்டீர்களே! ஆமாம் P சுசீலா அனாயசமாக மேலே உலவி வருவார்

      Delete
  6. அருமையான பாடல். அருமையான பழைய நினைவுகள். பாரதியின் பாடல் நல்ல சேர்க்கை. பாடலை மறுபடியும் கேட்டேன். எங்கோ அழைத்துச் சென்று விட்டது.
    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் படித்ததற்கு.கேட்டதற்கு.
      நினைவுகளும் பாடல்களும் எங்கோ கொண்டு செல்பவைதானே?

      Delete
  7. அருமையான பதிவு. பதிவின் சுவாரஸ்யம் அதை இன்னும் சற்று நீட்டித்திருக்கலாமோ என்று தோன்றியது .

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா. உன் யோசனையை ஏற்கிறேன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...