Skip to main content

குணங்களைக் கடந்து

 அலைபேசியடன் நமக்கான தொடர்பு வினோதமானது. கணமும் எனை நீ மறவாதே என்பது அல்ல. கணமும் என் கைவிட்டு அகலாதே என்பதானது. அலைபேசி மூலம் பேசவும் கூடுகிறது. அது மிகவும் அருகி வருகிறது சமீப காலத்தில். உரையாடல்கள் சென்று தேய்ந்து இற்று விட்டன். அலைபேசியில் நிலை குத்தி நிற்கின்றன கண்கள்.  சில போது எழுத்துக்கள் மீது கைவிரல்கள் நடனமாடுகின்றன. வயதைப் பொறுத்து வேகம். கூடுதலோ குறைவோ.

போகட்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் அலைபேசியில் அழைத்தார்.


“குணாதீதன் என்றால் யார்?” என்று கேட்டார். ஒரு கணம் தாமதித்தேன்.

“அடடா, அது குணத்ரய விபாக யோகம் ஆயிற்றே?  என்ன பகவத் கீதையா?” என்றேன்.  "ஆமாம்" என்றார். மேலே இருவருக்கும் நடந்த உரையாடல்.

நண்பர்:  ஆமாம். கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லையே?

நான்:    குணாதீதன் என்றால் குணங்களைக் கடந்தவன். குணங்களாவன மூன்று சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று.

நண்பர்:  சரி சத்வம் ஒளியின் இயல்பு      நிர்மலமானது. ரஜஸ்  விருப்பம் வேகம் செயலில் ஊக்கம் தருவது. தமஸ்  இருள், மந்தம், சோம்பர்  உறக்கத்தில் கொண்டு சேர்ப்பது.  இந்த மூன்றையும் கடந்தால்      கடவுளாகி விடலாமா?

நான்:   கடவுளாவது இருக்கட்டும். இந்தக் குணஙுகளைப் புரிந்து கொள்ள                வேண்டுமே? குணங்கள் உடம்பில் ஆத்மாவைப் பிணைக்கிறது.                          சத்வம் ஞானம் என்ற இன்பத்தால்  ரஜஸ் செயல் என்ற விருப்பத்தால்.                      தமஸ் சோம்பர் என்ற மயக்கத்தால். 

நண்பர்: இந்த குணங்கள் மாறி மாறி இயல்கிறதா?

நான்:  ஆமாம். சில வேளை சத்வம் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும்            அடக்கி விடுகிறது. சில வேளை ரஜோ குணம் சத்வத்தையும் தமோ                      குணத்தையும் அடக்கி மேலெழுந்து நிற்கிறது. அவ்வாறே                                        சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கி தமோ குணம் எஞ்சுகிறது.                மட்டையடியாக  உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஒரு நல்ல                            புத்தகத்தை படித்தபடி சிந்தனையில் ஆழ்ந்தால் சத்வம். டி.வி. சானலை          ஒன்றை விட்டு ஒன்று மாற்றிக் கொண்டோ, வேக வேகமாக                  வாட்ஸப்பில் பார்வர்டு செய்தபடியோ இருந்தால் ரஜஸ். வெறுமனே                    படுக்கையில் புரண்டு கொண்டிருந்தால் தமோ குணம்.

நண்பர்: சரி.. இந்த குணங்கள் எப்படி வந்து சேருகிறது?

நான்:  உடம்பெடுத்தவன் சத்வம் ஓங்கி நிற்கையில் இறப்பான்                    என்றால், உத்தம  ஞானிகளின் உலகை அடைகிறான். ரஜோ குணத்தில்                இறப்பவன் செய்கைப் பற்று உள்ளவரிடையே பிறக்கிறான். தமோ குணத்தில் இறப்பவன் மூடர்களிடையே தோன்றுகிறான்.

நண்பர்: குணங்களைக் கடந்தவன் எவ்வாறு நடந்து கொள்வான்?

நான்:  அவன் இந்த குணங்கள் தோன்றும் போது அஞ்சமாட்டான்.நீங்கும்போது                அவற்றை விரும்ப மாட்டான்.அவற்றைப் புறக்கணித்த மாதிரி                        இருப்பான்  இன்பம்- துன்பம் மானம்-அவமானம் எல்லாம் அவனுக்கு                    ஒன்றே..ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவான். மாறாத பக்தியுடன் இறைவனை வழிபட்டு குணங்களைக்  கடந்தவனாய் இருப்பான்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி

என்ற குறளை இந்த இடத்தில்  சொல்லி முடித்தேன்

இந்த உரையாடல் நண்பருக்கு மகிழ்ச்சியைத் தந்தது

உரையாடலின் ஆரம்பப் பகுதியும் முடிவிலே நான் சொன்ன குறளும் அசலானது. உரையாடலின் மற்ற பகுதிகள் மகாகவி பாரதியின் பகவத் கீதையை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்டது.

தி சந்தானம்


Comments

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...