லாங்ஸ்டன் ஹுயூஸின் தந்தை அவர் அயல்நாடு சென்று பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஹுயூஸ் கவிஞர் ஆனார். பெரும்பாலும் அது அப்படித்தான் நிகழ்கிறது. லாங்ஸ்டன் ஹுயூஸ் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். சுதந்திர புருஷர்.. விட்டு விடுதலையாகி சிட்டு குருவியைப் போல் நிற்க நினைப்பவர். இவர் கவிதைகளில் அதிகம் பயன்படுத்திய வார்த்தை கனவு. கனவைப் பயன்படுத்தாத கவிஞரும் உண்டா? பாரதி கனவு மெய்ப்பட வேண்டும் என்று சொல்லவில்லையா? மேலும்" உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவு" என்றும் பேசவில்லையா பாரதியின் கவிதைகள். லாங்ஸ்டன் ஹுயூஸின் கவிதைகளிலும் கனவு என்ற வாரத்தை வருகிறது. எவ்வாறு? பார்க்கலாம்.
இப்போதெல்லாம் கனவு கிடைப்பதில்லை
கனாக் காண்பவர்களுக்கு
பாடலும் கிடைப்பதில்லை
பாடுபவர்களுக்கு
சில நிலப் பரப்புகளில்
இருண்ட இரவும்
குளிர்ந்த எஃகும்
இருக்கின்றன
ஆனால்
கனவு வந்து விடும்
மேலும்
பாடல்
சிறைக் கதவை உடைத்து
வெளிவரும்
இன்னொரு கவிதை
கனவுகளை பற்றிக்கொள் இறுக
ஏனென்றால்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை
ஒரு சிறகொடிந்த பறவை
பறக்க முடியாது அதனால்
கனவுகளைப் பற்றிக் கொள் இறுக
ஏனென்றால்
கனவுகள் போய் விட்டால்
வாழ்க்கை
பனியில் உறைந்த ஒரு பாழ் நிலம்
பார்க்க முடியாது உன்னால்
கவிஞன் கனவோடு நிற்கவில்லை. காதலைச் சொல்லுகிறான்.
நட்சத்திரங்கள் இல்லாத இரவுக்கு
நான் உன்னை ஒப்பிட்டு விட முடியும்
ஆனால் உனது கண்கள் இருக்கிறதே?
கனவுகள் இல்லாத உறக்கத்திற்கு
நான் உன்னை ஒப்பிட்டு விட முடியும்
ஆனால் உனது பாடல்கள் இருக்கிறதே?
கனவுகள் அலைகள் போல புரண்டு வருகின்றன.
கவிதை என்னும் பறவை தன் சின்னச் சிறகுகளை அதில் நனைக்கவே செய்கிறது.
தி சந்தானம்
குறிப்பு லாங்ஸ்டன் ஹுயூஸின் கவிதைகள் இணையத்தில் படிக்கக் கிடைத்தது. கவிதைகளின் தமிழாக்கம் என்னுடையது. (Poem hunter
My poetic side)
Comments
Post a Comment