நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
இது குறுந்தொகையில் வரும் பாடல். தேவகுலத்தார் என்பவர் எழுதிய பாடல். குறிஞ்சி நிலப் பாடல். தலைவி கூறுவதாக அமைந்திருக்கிறது.
பாடலை இப்படி விளக்கலாம்.
குறிஞ்சி மரத்தின் கொம்புகள் கரியவை. வண்டுகள் அந்த மரத்தின் மலர்களிலிருந்து பெருமளவில் தேனைச் சேகரிக்கின்றன. இத்தகைய நாட்டின் தலைவனிடம் நான் நட்பு கொண்டேன். இந்த நட்பு பூமியைக் காட்டிலும் பெரியது. ஆகாயத்தைப் பார்க்கிலும் உயர்ந்தது. கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் கொண்டது.
பின்னும் ஒரு பாடல். உறையூர் முதுகொற்றனார் இயற்றியது.
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை யிடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே
அவர் வரவில்லை. முல்லை பூத்தது. பனை ஒலையைக் குடையாகக் கொண்டு வந்து குட்டிகளை உடைய ஆட்டின் திரளோடு சென்று தங்கு முன்பு பாலைக் கொண்டு வந்து தந்து தானியம் பெற்றுச் செல்கிறான் ஆட்டு இடையன். அவன் தன் தலையில் சின்னச் சின்ன இதழ்கள் கொண்ட முல்லையின் அரும்புகளைச் சூடிக் கொள்கிறான்.
ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.
இந்தப் பாடலை இயற்றியவர் பரணர்.
தலைமகள் தோழிக்குச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இதில் கையாளப்படும் உவமை பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. தலைவன் தீண்டும் போது பசலை நீங்குகிறது. பிரியும் போது எல்லாம் வந்து பரவுகிறது. இது எப்படி என்றால் கேணியின் நீரை ஊர் மக்கள் பருகும் போது பாசி அகன்று விடுகிறது. நீர் பருகாத சமயம் பாசி மீண்டும் சேருகிறது.
குறுந்தொகைப் பாடல்கள் தீட்டிக் செல்லும் ஓவியங்கள் மிகவும் அற்புதமானவை. நட்பும் பிரிவும் பரவிப் பின் கலையும் பாசியைப் போன்றன என்று நம்மிடம் சொல்பவை. . நொடியில் படம் பிடித்த நிழற்படக் காட்சி அவை. நெஞ்சம் விட்டு என்றும் அகலாதவை.
தி சந்தானம்
அருமையான வர்ணனை. பழைய பாடலைத்தேடிக் கண்டு பிடித்து பொருள் சொன்னதற்கு நன்றி.
ReplyDeleteநன்றி ராம்.
Delete