Skip to main content

அவரோ வாரார்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.


இது குறுந்தொகையில் வரும் பாடல். தேவகுலத்தார் என்பவர் எழுதிய பாடல். குறிஞ்சி நிலப் பாடல். தலைவி கூறுவதாக அமைந்திருக்கிறது.


பாடலை இப்படி விளக்கலாம்.


குறிஞ்சி மரத்தின் கொம்புகள் கரியவை. வண்டுகள் அந்த மரத்தின் மலர்களிலிருந்து பெருமளவில் தேனைச் சேகரிக்கின்றன. இத்தகைய நாட்டின் தலைவனிடம் நான் நட்பு கொண்டேன்.  இந்த நட்பு பூமியைக் காட்டிலும் பெரியது. ஆகாயத்தைப் பார்க்கிலும் உயர்ந்தது. கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் கொண்டது.


பின்னும் ஒரு பாடல். உறையூர் முதுகொற்றனார் இயற்றியது.


அவரோ வாரார் முல்லையும் பூத்தன     

பறியுடைக் கையர் மறியினத் தொழியப்    

பாலொடு வந்து கூழொடு பெயரும்     

யாடுடை யிடைமகன் சென்னிச்    

சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே




அவர் வரவில்லை.  முல்லை பூத்தது. பனை ஒலையைக் குடையாகக் கொண்டு வந்து குட்டிகளை உடைய ஆட்டின் திரளோடு சென்று தங்கு முன்பு பாலைக் கொண்டு வந்து தந்து தானியம் பெற்றுச் செல்கிறான் ஆட்டு இடையன். அவன் தன் தலையில் சின்னச் சின்ன இதழ்கள் கொண்ட முல்லையின் அரும்புகளைச் சூடிக் கொள்கிறான்.

 

ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க     

பாசி யற்றே பசலை காதலர்    

தொடுவுழித் தொடுவுழி நீங்கி     

விடுவுழி விடுவுழிப் பரத்த லானே. 


இந்தப் பாடலை இயற்றியவர் பரணர்.


தலைமகள் தோழிக்குச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இதில் கையாளப்படும் உவமை பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது. தலைவன் தீண்டும் போது பசலை நீங்குகிறது.  பிரியும் போது எல்லாம் வந்து பரவுகிறது. இது எப்படி என்றால் கேணியின் நீரை ஊர் மக்கள் பருகும் போது பாசி அகன்று விடுகிறது. நீர் பருகாத  சமயம் பாசி மீண்டும் சேருகிறது.

     

குறுந்தொகைப் பாடல்கள் தீட்டிக் செல்லும் ஓவியங்கள் மிகவும் அற்புதமானவை.  நட்பும் பிரிவும் பரவிப் பின் கலையும் பாசியைப் போன்றன  என்று நம்மிடம் சொல்பவை. .  நொடியில் படம் பிடித்த நிழற்படக் காட்சி அவை. நெஞ்சம் விட்டு என்றும் அகலாதவை.


தி சந்தானம்

Comments

  1. அருமையான வர்ணனை. பழைய பாடலைத்தேடிக் கண்டு பிடித்து பொருள் சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...