நான் கல்லூரியில் புதுமுக வகுப்பில் இருந்தேன். வணிகத் திரைப்படங்களைத் தாண்டி எதுவும் தெரியாது. அப்போது தான் திக்கற்ற பார்வதி என்ற திரைப்படச் சுவரொட்டியைப் பார்த்தேன். அந்தப் பெயரில் ராஜாஜியின் கதை படித்தது ஞாபகம் வந்தது. குடிப்பழக்கத்தின் கேட்டை விளக்கும் கதை. கருப்பனை "வேறே" வைத்தார்கள் என்று துவங்கும். அந்தக் கதைதான் திரைப்படம் ஆயிற்று என்று புரிந்து கொண்டேன். திரை அரங்கம் தொலைவில் இல்லை.. அதன் பெயர் அப்போது ஜகதா. கையில் அபூர்வமாக காசு இருந்தது. தனியே கிளம்பி விட்டேன். அரங்கத்தில் கூட்டம் இல்லை. வெகு சிலர் தான் இருந்தார்கள். நிஜமாகவே காற்றாடியது. திறந்திருந்த மடங்கு கதவு வழியாக. மாலைக் காட்சி. இயற்கையாகவே இருட்டி விடும். எனவே கதவுகள் திறக்கப்பட்டு விடும்.
நடிகர் ஸ்ரீகாந்த் கருப்பனாக நடித்தார். அவருக்கு இணையாக பார்வதி என்ற பாத்திரத்தில் லட்சுமி. கருப்பு வெள்ளைப் படம். சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கியிருந்தார். அப்போது கேள்விப் படாத பெயர். கேள்விப் பட்டிருந்தாலும் பெரிதாக ஒன்றும் இல்லை. திரை நாயகர்களைச் சுற்றித்தான் திரைப்படம் என்பதே அப்போதைய கோட்பாடு.
கருப்பன் ஏழைக் குடியானவன். பார்வதியை மணக்கிறான். இருவரும் குடிசையில் வாழ்கிறார்கள். வண்டி மாடு வாங்கி ஓட்டிப் பிழைப்பு நடத்த எண்ணுகிறான். வட்டிக்கு கடன் வாங்குகிறான். எல்லாம் சரியாகச் செல்லும் போது குடிப்பழக்கம் ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக குடியில் மூழ்குகிறான். பிழைப்பை மறக்கிறான். பார்வதியின் கண்ணீருக்குப் பயன் இல்லை. வறுமை மேலும் வறுமை. இடையில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்து விடுகிறது. கடன் கொடுத்தவனின் மகன் அடிக்கடி கருப்பன் இல்லாத சமயம் வருகிறான். பணத்தைத் திருப்பித் தர நெருக்குகிறான். அவனுக்குப் பார்வதி மேல் ஒரு கண். தொடர்நத வருகை. தொடரும் பார்வை. ஓரு நாள் பார்வதி அவனிடம் தன்னை இழக்கிறாள். விஷயம் அறிந்த கருப்பன் மிகுந்த ஆவேசம் கொள்கிறான். கடன் கொடுததவனின் மகனைக் கடுமையாகத் தாக்குகிறான். சிறை செல்ல நேர்கிறது. வக்கீலின் யோசனையைக் கேட்ட பார்வதி தானே தாக்கியதாக வாக்குமூலம் தருகிறாள். கருப்பன் விடுதலை ஆகிறான். பார்வதியை புறக்கணிக்கிறான். மனமுடைந்த பார்வதி தற்கொலை செய்து கொள்கிறாள்.
இந்தத் திரைப்படம் அந்த வயதில் ஓரு மாறுபட்ட அனுபவம். சப்தம் குறைவாக இருந்தது. எல்லோரும் சாதாரணமாகப் பேசினார்கள். காமிரா கோணங்கள் வித்தியாசமாக இருந்தது.
ஒப்பனை மிகையாக இல்லை. லட்சுமியின் தோற்றமும் நடிப்பும் இயல்பாக இருப்பதாக தெரிந்தது. லட்சுமி தலையை இறுக்கிப் பின்னியிருந்தார். நெற்றியில் வட்டமாகப் பெரிய பொட்டு வைத்திருந்தார். அளவில் பெரிய மூக்குத்தி அணிந்திருந்தார். ஸ்ரீகாந்த் பாத்திரம் உணர்ந்து நடித்திருந்தார்.
படத்திற்கு இசை சிட்டிபாபு. வீணை இசை மேதை. பின்னணி இசை அதிர்ச்சி தராத மென்மையுடன் கூடி இருந்தது.
படத்தில் ஓரு பாடல் காட்சி. பார்வதி கருவுகிறாள். சிசு மெல்ல வளருகிறது.
சூல் கொண்ட மேகங்கள் அசைகிறது. மழை வரப் பார்க்கிறது. உருவடைந்த்
பிள்ளை வெளிவர நேரம் பார்த்து இருக்கிறது.
இந்தப் பாடல் காட்சியில் லட்சுமி திறம்பட நடித்திருந்தார். தாய்மை பூண்ட பெண்ணின் இன்பம், வேதனை எல்லாம் முகத்தில் அழகாக வெளிப்படுத்தி இருந்தார். சிட்டிபாபுவின் இசை அருமை. நாட்டுப்புற இசையும் செவ்வியல் இசையும் சேர்ந்த அற்புதக் கலவை. மேலும் வாணி ஜெயராமின் குரல்.
திரையில் இந்தப் பாடலைக் கேட்டும் கண்டும் பிடித்தது. வானொலியில் ஒலிக்கும் போது வானொலிப் பெட்டியின் அருகே நின்று கேட்கப் பிடித்தது.
இன்றளவும் பிடிக்கிறது.
கேளுங்கள். பாருங்கள்.
ஆஹா, ஜெகதா நினைவுகள். அக்காவும் நானும் போனால் 90 பைசா டிக்கெட், அண்ணாவுடன் செல்கையில் 1.45 பால்கனி. பாப்கார்ன், கோக் செலவுல்லாம் கிடையாது. எவ்வளவு படங்கள். சில சமயம் தண்ணி குடிக்க அம்மா ஃப்ரெண்ட் மாமி, பேர் மறந்து போச்சு அவாத்துக்கு போவோம்.
ReplyDeleteஇந்த படம் பார்த்ததில்லை. லிஸ்ட்ல இருந்திருக்கலை. எப்டி கோவையாக உனக்கு நினைவு இருக்கு?
நகரத்தில் ஓடித் தேய்ந்த படங்கள் நடுவாந்தர ஹீரோக்களின் படங்கள் பழைய படங்கள் அபூர்வமாக ஹிந்திப் படங்களும் ஜகதாவில் பார்த்தது உண்டு.
Deleteஆமா டி வி எஸ் நகர்ல இருந்த வரைக்கும் நான்லாம் படம் ரிலீஸ் ஆனவுடன் டவுன் தியேட்டர்ல போய் பார்த்ததே இல்ல. எப்பவுமே செகண்ட் ரவுண்ட் ஜெகதால வரச்சதான். சில அரிதான சமயங்களில் ஜெய்ஹிந்திபுரம் முருகன்லயும் பாத்திருக்கோம். ஜெகதான்ன உடன் இன்னொரு நினைவு. நான் ஆறாவது படிக்கும் போது ஜெகாதாக்கு அருகில் உள்ள மருத்துவமனையில், ஜெனனி ஜெனனம். மழைத் தூரலில் ஓடியே ஆஸ்பிடலை அடைந்தப்ப, எங்க அம்மா ஜன்னல் வழியா குழந்தைய காமிச்சது அப்டியே ஞாபகம் இருக்கு.
Deleteதென்னையின் கீற்றைச் சலசலவெனச் செய்து வரும் காற்றே என்ற பாரதியின் கவிதை ஞாபகம் வந்தது. காற்றாய் மழைச் சாரலாய் எத்தனை நினைவுகள். அற்புதமான நருணத்தை நினைவு கூர்ந்தாய்.
Delete//தருணத்தை//
Delete