ஹெமிங்வே The Sun also rises" என்று ஒரு நாவல் எழுதினார். அதுதான் அவருடைய முதல் நாவல். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் பாரீஸில் இருந்தார். அந்த சமயம் எழுதப்பட்ட நாவல் அது. ஸ்பானிய காளைச் சண்டையை மையமாக வைத்து எழுதினார் என்று சொல்வார்கள். நான் அந்த நாவலைப் படித்ததில்லை. ஆனால் The Undefeated என்ற அவரது கதையைப் படித்தது உண்டு. அது ஒரு காளைச் சண்டை வீரனைப் பற்றியது. அவன் பெயர்
மானுவல் கார்ஸியா. ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக வலம் வந்தவன். ஆனால் இப்பொழுது..? வாய்ப்புக் கேட்டு ரெடினாவை அணுகுகிறான். உயிரோடுதான் இருக்கிறாயா? அடிபட்டுக் கொண்டாயாமே? வேறு வேலை தேடிக் கொள்ள வேண்டியது தானே? என்கிறான் ரெடினா அலட்சியமாக. மானுவல் தளராமல் பதில் கூறுகிறான். எனக்குத் தெரிந்த வேலை காளையோடு சண்டை இடுவது மட்டுமே என்கிறான். அப்படி என்றால் உன்னை மாற்று வீரனாகத்தான் களமிறக்க முடியும் என்கிறான் ரெடினா. நான் ஒருபொழுதும் மாற்று வீரனாகக் களம் இறங்கியதில்லை என்கிறான் மானுவல். உனது இஷ்டம் என்கிறான் ரெடினா. தனது நிலைமையை எண்ணி வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறான் முன்னாள் பிரபலம். முன் பணம் பெற்றுக் கொள்கிறான்.
இந்த இடத்தில் ஸ்பானிய காளைச் சண்டையை ஒருவாறு விளக்க முற்படுகின்றேன். அது நமது ஜல்லிக்கட்டை விட மாறுபட்டது.
அது விளையாட்டாக மட்டுமல்ல, ஒரு நிகழ் கலையாகவும் பார்க்கப் படுகிறது. களத்தில் காளை ஓடி வருகிறது. அதன் முன்னே காளை வீரன் ஒரு கையில் வண்ணத் துணியை அசைத்து சீண்டியபடி இருக்கிறான். மறு கையில் ஒரு வாளை உயர்த்திப் பிடித்திருக்கிறான். அவன் உடலோடு ஓட்டிய ஆடை அணிந்திருக்கிறான். துணியைப் பிடித்தபடி அவன் செய்யும் அசைவுகள் ஒரு தாள கதியில் இருக்கிறது. அரங்கில் இசை ஒலிக்கிறது. பார்வையாளர்களின் ஆரவாரமும் கூட. காளையின் கண்கள் நிறம் அறியாது. ஆனால் துணியின் அசைவில் அதன் கவனம் சிதறுகிறது. இடையிடையே குதிரை மீது சுற்றிச் சுற்றி வரும் வீரன் காளையின் கொம்பின் பின்புறம் மற்றும் திமிலையைச் சுற்றிய பகுதியில் முள் ஈட்டியை ஒன்றன் பின் ஒன்றாகச் செருகுகிறான். ரத்தம் பெருகப் பெருக சீண்டப்படும் காளை சுற்றிச் சுற்றிப் போராடுகிறது. களைக்கும் வரை போராடுகிறது. காளை வீரன் தொடர்ந்து சீண்டியபடியே இருக்கிறான். இறுதியாக வாளை உயர்த்தி காளையின் முதுகுத் தண்டில் செலுத்துகிறான். காளை சரிந்து விழுந்து மடிகிறது. மடிந்த காளை கயிற்றில் பிணைக்கப்பட்டு இரண்டு குதிரைகளால் மண்ணோடு மண்ணாக இழுத்துச் செல்லப்படுகிறது.
ஹெமிங்வேயின் The Undefeated கதையைத் தொடருவோம். முன் பணம் பெற்றுக் கொண்ட மானுவல் களத்தில் தனக்குத் துணையாக குதிரை மேல் ஏறியபடி ஈட்டி கொண்டு தாக்க ஒருவனைத் தானே ஏற்பாடு செய்ய முனைகிறான்.. அவன் பெயர் ஜூரிடோ. மானுவல் கேட்ட உடன் ஜூரிடோ மறுக்கிறான். எனக்கு வயதாகிறது. என்னால் முடியாது என்கிறான். மேலும் மானுவலிடம் நீயே அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்திருக்கிறாய். உனக்கு ஏன் இந்த வேலை என்கிறான். மானுவல் ஒருவாறு பேசி அவளைச் சம்மதிக்க வைக்கிறான்.
குறித்த நாளில் இருவரும் களம் இறங்குகிறார்கள். காளை களத்தில் சீறி வருகிறது. மானுவல் தீரமாக எதிர் கொள்கிறான். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு காளையை வீழ்த்துகிறார்கள். வயதானாலும் அவர்களிடம் திறமை எஞ்சியிருக்கிறது என்பதை அனைவரும் உணர்கிறார்கள்.
1968ம் வருடம் குடியிருந்த கோவில் என்று ஒரு திரைப்படம் வந்தது. அதில் ஒரு பாடல் காட்சி. எம்ஜியார் ஸ்பானிய காளைச் சண்டை வீரனைப் போல உடம்போடு ஒட்டிய உடையை அணிந்திருப்பார். ராஜஸ்ரீ பனி போன்ற மேலாடை அணிந்து காளை போலச் சீறிப் பாய்வார். எம்ஜியார் கையில் அழுத்தமான வண்ணத்தில் துணியை அசைத்தபடி ராஜஸ்ரீயைச் சீண்டுவார்.
1969ம் வருடம் சிவந்த மண் என்று ஒரு திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் சில காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட்டது. இரண்டு நிமிடக் காட்சியாக ஸ்பானிய காளைச் சண்டை இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. சிவாஜியும் காஞ்சனாவும் பார்த்து ரசிப்பதாகக் காட்சி அமைத்திருந்தார்கள். முன்பாக ஆனந்த விகடன் பத்திரிக்கையில் அந்நிய மண்ணில் சிவந்த மண் என்ற தலைப்பில் சிவாஜி எழுதிய தொடர் கட்டுரை வந்தது. அதில் காளைச் சண்டையைப் பார்த்த அனுபவத்தை எழுதியிருப்பார். காளையைச் சீண்டி ஈட்டியாலும் வாளாலும் தாக்கிக் கொல்வது என்ன வீரம் என்று கேள்வி எழுப்பியிருப்பார். அதைப் பார்க்கும் போது நமது ஜல்லிக் கட்டு உண்மையில் வீர விளையாட்டு என்பதாகக் குறிப்பிட்டிருப்பார்.
காணொளியைப் பார்க்கலாம்.
அஞ்சாத சிங்கம் என் காளை பாட்டு ஞாபகம் வந்தது.
ReplyDeleteஸ்பானிய காளைச் சண்டை பார்ப்பதற்கே சற்று அருவருப்பாக இருக்கிறது. அதைப்பார்க்கும் போது நம்ம ஊர் ஜல்லிக்கட்டு வீனமாக இருக்கிறது. இரண்டு படங்களும் நியூ சினிமாவிலும் சென்ட்ரல் சினிமாவிலும் பார்த்த நினைவு. நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி ராம்
Deleteவீரமாக என்று இருக்க வேண்டும்
ReplyDeleteகாளையைச் சீண்டி கொன்று விடும் அவர்களது விளையாட்டை விட ஜல்லிக்கட்டு எவ்வளவோ மேல். சம கால திரைப்படத்தை அருமையாகக் கொண்டு வந்து எழுதியுள்ளாய். மீண்டும் பாராட்டு க்கள்.
ReplyDeleteநன்றி மதி படித்ததற்கும் பாராட்டியதற்கும்
Delete