சிரி சிரி முவ்வா என்று ஒரு திரைப்படம். நானும் பாஸ்கரும் மதுரையில் இந்தப் படத்தைப் பார்த்தோம். பாஸ்கர் எனது ஒன்று விட்ட தம்பி. இந்தத் திரைப்படம் பார்த்ததை நினைவு கூர்ந்து எழுதியிருந்தான். ஜெயப்ரதா அறிமுகம் ஆனது இந்தத் திரைப்படம் என்று நினைக்கிறேன். இந்தப் படம் நெடுக ஓயாமல் ஆடிக் கொண்டே இருப்பார். மாற்றாந்தாய் காலில் சூடு வைத்தாலும் ஆடிக் கொண்டே இருப்பார். இரவில்.நிலவொளியில். தென்னை மர நிழலில். பகல் வெயிலில் பாறையில். மலைச் சரிவில். நீரலையில் இப்படி எல்லாப் பொழுதும் எல்லா இடங்களிலும் ஆடியபடியே இருப்பார். ஆடுவதில் அத்தனை விருப்பம். அவருடைய தோழன் சந்திரமோகன். அவரும் குனிந்து வளைந்து நிமிர்ந்து சலிக்காமல் இணைந்து ஆடுவார். கிராமத்தில் இருந்து விலகி நகரத்துக்குச் சென்று கலையின் உச்ச நிலையை அடைந்து எப்படிப் புகழ் ஈட்டுகிறாரகள் என்பது கதை. மிகையும் நாடகத் தன்மையும் யதார்த்தமும் ஒரு வினோதக் கலவையில் உருவான படம். இந்தப் படத்தை இயக்கியவர் கே.விஸ்வநாத். எனக்கு அப்போதெல்லாம் G R விஸ்வநாத் என்பவரைத் தான் தெரியும். சொல்ல வேண்டியதில்லை. அவர் அந்நாளில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரர்.
கே.விஸ்வநாத் இயக்கி சங்கராபரணம் என்ற தெலுங்கு மொழித் திரைப்படம் 1980ல் வந்தது. அந்தப் படம் பெரும் வெற்றி கண்டது. தமிழ் நாட்டிலும் கூட. சங்கர சாஸ்திரி ஒரு சாஸ்திரீய இசைக் கலைஞர். துளசி ஒரு ஆடல் நங்கை. சங்கர சாஸ்திரியின் இசைக்கு தன் மனதைப் பறி கொடுத்தவள். அவர் மேல் ஆழமான பக்தி பூண்டவள். ஆனால் அவளுடைய அம்மா ஜமீன்தார் ஆசைக்கு அவளை இணங்க வைக்க முயற்சிக்கிறாள். இரவில் தப்பி ஓடும் துளசி ரயிலில் சாஸ்திரியைப் பார்க்கிறாள். அவர் அடைக்கலம் தருகிறார். தேடி வந்த அவளுடைய அம்மா சாஸ்திரியைக் கண்டபடி பேசி துளசியைத் தன்னோடு அழைத்துச் சென்று விடுகிறாள். சாஸ்திரியின் இசையை இசைத் தட்டில் சுழல விட்டு துளசி மெய்மறந்து இருக்கையில் ஜமீன்தார் அவளைச் சீரழிக்கிறான். மேலாக சாஸ்திரியின் படத்தை உடைக்கிறான். இதைக் கண்டு கோபமடைந்த துளசி அவனைக் கொன்று அந்த ரத்தத்தை சாஸ்திரியின் காலில் பூசுகிறாள். சாஸ்திரி கேஸ் நடத்தி அவளை விடுவிக்கிறார். அவர் வீட்டு மனுஷியாகவே ஆகிவிடுகிறாள். அவர்களிடையே நிலவும் மேன்மையான உறவை ஊர் உணரவில்லை. அவதூறு பேசுகிறது. தன்னால் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுவதை உணர்ந்த துளசி சாஸ்திரியை விட்டு விலகிச் செல்கிறாள். தன்னைச் சீரழித்தவனின் கருவைத் தாங்கி மகனைப் பெறுகிறாள். தகுந்த வயது வந்ததும் புகழும் பணமும் இழந்து இருக்கும் சாஸ்திரியிடம் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் அவரிடமே இசை பயிலுமாறு செய்கிறாள். மறைமுகமாக தனது முயற்சியால் சங்கர சாஸ்திரி மீண்டும் கச்சேரி செய்ய உதவுகிறாள்.அவளுடைய மகனை சங்கர சாஸ்திரியின் இசை வாரிசாக உலகம் அறிகிறது. தனது காலில் அணிந்த தோடாவை சங்கர சாஸ்திரி அவனுக்கு அணிவித்து விட்டு மேடையிலேயே உயிர் துறக்கிறார். அவர் காலில் விழுந்தபடியே துளசியின் உயிர் பிரிகிறது. இப்படி ஒரு உணர்ச்சிகரமான முடிவு.
சலங்கை ஒலி என்ற படம் 1983ல் வெளிவந்தது. அதுவே தெலுங்கில் சாகர சங்கமம் என்ற பெயரில் வந்தது. பாலகிருஷ்ணன் நடனக் கலைஞன். ஆர்வமும் திறமையும் ஒருங்கே இணையப் பெற்ற இளைஞன். ஏழை. அம்மா சமையல் வேலை செய்கிறாள். மாதவி பணக்கார வீட்டுப் பெண். பாலகிருஷ்ணனிடம் நட்பாகப் பழகுகிறாள். அவனுடைய அபாரமான திறமை அவளைக் கவர்கிறது. அவனுடைய உன்னதமான நடனக் கலை உலகத்தாரின் கவனத்தைப் பெற வேண்டும் என எண்ணுகிறாள். அவனுக்கு நாடு தழுவிய நடன விழாவில் நடமாட வாய்ப்புப் பெற்றுத் தருகிறாள். நெகிழ்ந்து போன அவன் அவள் கைகளைப் பற்றி முத்தமிடுகிறான். அந்தக் காட்சி மிகவும் அற்புதமானது. எனக்கு மிகவும் பிடித்தது.
சிரிவெண்ணிலா என்று ஒரு தெலுங்கு படம். 1986 ம் வருடம் வந்தது. நான் பார்த்திருக்கிறேன். தியேட்டரிலா தொலைக்காட்சியிலா என்று நினைவில்லை.
ஒரு பார்வையற்ற மனிதன். அவன் புல்லாங்குழல் வாசிப்பான். யாரும் கற்றுத் தரவில்லை. தானே துளைகளில் உணர்ந்து இசையை அறிகிறான். தானே அதில் தோய்ந்தபடி இருக்கிறான். அந்த ஊருக்கு சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டியாக வரும் பெண் இவனது இசைத் திறமையை
வெளிச்சம் போட்டுக் காட்ட பெரும் முயற்சி செய்கிறாள். இந்தப் படத்தில் ஒரு காட்சி. வானவில்லைப் பற்றி பார்வையற்ற அவன் கேட்கிறான். ஏழு சுரங்களோடும் அவன் கைகளின் தொடுகையோடும் அவள் விளக்கும் காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது.
விஸ்வநாத்தின் கதைகளில் ஆதாரமாக ஓரே இழைதான். வண்ணங்கள் வேறு வேறு.
எந்த வித பலனும் எதிர்பாராது ஒருபெண் ஆணின் நிலையை மேன்மைப் படுத்த தன்னால் ஆன முயற்சிகளைச் செய்கிறாள். வெல்கிறாள். இயல்பான அன்பும் இங்கிதமும் மெல்லச் சுரந்தபடியே இருக்கிறது.
இப்படிப்பட்ட பெண்கள் நம்மிடையே இருக்கத் தானே செய்கிறார்கள்?
சலங்கை ஒலி சங்கராபரணம் படங்கள் பார்த்திருக்கிறேன். அநேகமாக திரு கே விஸ்வநாத் இயக்குனர் மறைவை ஒட்டி இந்தப் பதிவு என்று நினைக்கிறேன். பாட்டு அருமை. பதிவுக்கு நன்றி
ReplyDeleteஆமாம் ராம். சில வினோதமான பொருத்தங்கள். நான் வங்கிப் பணியில் சேர்ந்த நாள் 1.2.1979. சங்கராபரணம் படம் வெளியான நாள் 2.2.1980. கே.விஸ்வநாத் மறைந்த தினம் 2.2.2023
Deleteசலங்கை ஒலியும் சங்கராபரணமும் பாத்துருக்கேன். இயக்கம் தாண்டி இசையும் வேற லெவல் ரெண்டுத்லயும். கமலஹாஸன் வேல்யூ அடிஷன் ச ஒலி. இப்ப குழந்தைகள்ட்ட அவர் போட்டோ காமி.. " ஹை யாரடி நீ மோகினி தாத்தா" ம்பாங்க..🙂🙂
ReplyDelete🙂
DeleteA beautiful tribute to a wonderful film maker.
ReplyDeleteThank you Ram
Delete