Skip to main content

ஒரு மனிதன்

 ஜெயகாந்தனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த விருது கொடுத்ததன் மூலம் சாகித்ய அகாடமி தன்னைக் கெளரவப்படுத்திக் கொண்டது என்று அவர் சொன்னார். விருது கிடைத்ததை விட இந்தப் பேச்சைப் பற்றியே எல்லோரும் பேசினார்கள். விருது வாங்கியதை முன்னிட்டு டெல்லியில ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. ஜெயகாந்தன் பேச வருகிறார். மைக் வேலை செய்ய வில்லை. உடனே ஜெயகாந்தன் தலையை மேலும் கீழும் அசைக்கிறார். உடனடியாகப் பார்வையாளர்களிடம்  ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். Instant connect with the audience. இதைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில எழுதியிருந்தார்கள். மேலும் அவரோடு ஒரு பேட்டி கண்டு வெளியிட்டிருந்தார்கள். 


மதுரையில் ஜெயகாந்தன் பேச்சை மூன்று முறை கேட்டிருக்கிறேன். ஒன்று துக்ளக் பத்திரிக்கை இரண்டாவது ஆண்டு விழா. நான் பள்ளி மாணவன். அது பங்களாதேஷ் பிறந்த நேரம். முஜிபுர் ரஹ்மான் பற்றியும் வங்கம் பிறந்தது பற்றியும் மிகுந்த ஆவேசமாகப் பேசினார். வங்காளம் பிறந்த அந்த நாட்களில் எல்லோரும் மிகுந்த மனவெழுச்சி கொண்டிருந்தோம்.  இரண்டாவது மணியன் நடத்திய இதயம் பேசுகிறது பத்திரிக்கை விழா. சிவசங்கரி,ஓவியர் ஜெயராஜ், ஜெயகாந்தன் இவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். தோழர்கள் ஜெயராஜை அவர் வாரப் பத்திரிக்கையில் வரையும் ஓவியங்களுக்காக வறுத்து எடுத்தனர். அப்போது ஜெயகாந்தன் மேடையில் நீங்காத புன்னகையுடன் இருந்தார். இந்த முறை அவரது பேச்சில் ஆவேசம் குறைந்திருந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் மதுரை சோமுவின் கச்சேரி இருந்தது. நானும் நண்பர் ராமநாதனும் கச்சேரி இறுதி வரை இருந்தோம்.


மூன்றாவதாக நான் ஜெயகாந்தன் பேச்சை நண்பர் ராமச்சந்திரனுடன் சென்று கேட்டேன். அது மிக்கயில் கோர்பச்சேவின் மறுசீரமைப்புக் காலம். சோவியத் யூனியன் என்பது மறைந்து சிறு நாடுகளின் காமன்வெல்த் ஆக மாறியிருந்த நேரம்.

சத்யமேவ ஜெயதே,  உண்மை வெல்லும் என்ற கருத்தில் பேசினார்.தேடிச் சோறு நிதம் தின்று..என்ற பாரதியின் கவிதையைச் சொன்னார். 


தேடிச் சோறுநிதந் தின்று — பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்

வாடித் துன்பமிக உழன்று — பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து — நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல

வேடிக்கை மனிதரைப் போலே — நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?



நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று சொல்லும் போது குரலில் ஒரு அழுத்தம் வந்து விழுந்தது. தலை மேலும் கீழும் அசைந்தது.. கூட்டம் முடிந்து எல்லோரையும் வணங்கியபடி வந்த அவர் மப்டியில் இருந்த உளவுப் போலீஸைக் கண்டு கொண்டு வணங்கினார். உளவுப் போலீஸ் பதிலுக்கு வணங்குவதா வேண்டாமா என்று ஒரு கணம் திகைத்துப் போனார்.


ஜெயகாந்தன் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமானது ஆனந்த விகடனில் அவர் எழுதிய  முத்திரைக் கதைகள் வழியாக. அது நான் பள்ளி இறுதி வகுப்புகளில் இருந்த காலம். குறிப்பாக சீசர் என்ற கதையைப் படித்தது நினைவில் இருக்கிறது. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்ற ஷேக்ஸ்பியரின் வரியைப் பிடித்துக் கொண்டு எழுதிய கதை. ஊரிலிருந்து வந்த சொந்தக்கார இளைஞனையும் தனது மனைவியையும் சம்பந்தப் படுத்தி வீண் பழி சுமத்துவதை கணவர் எப்படி நிதானமாக எதிர் கொள்கிறார் என்பது கதை. என் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லாமல் சொல்கிறார். இந்தக் கதைக்கு கோபுலு வரைந்த ஓவியம் உயிரோட்டமானது.




ஓரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம் என்ற கதையை ஆனந்த விகடனில் தொடராக வாரா வாரம் வாசித்தது மனதில் பசுமையாக இருக்கிறது. ஹென்றி என்ற அற்புதமான மனிதனை வெறும் கதாபாத்திரமாக நினைக்க முடியவில்லை. அத்தியாயம் அத்தியாயமாகக் கதை வளர்ந்தது ஒரு ஓவியம் மெல்ல மெல்ல உருப் பெறுவது போல இருந்தது.


விழுதுகள், கருணையினால் அல்ல, யுக சந்தி. சிலுவை, பிரளயம், இப்படி எத்தனை எத்தனை கதைகள். எத்தனை எத்தனை கதைச் சூழல்கள். எத்தனை எத்தனை கதை மாந்தர்கள். எண்ண எண்ண வியப்பாக இருக்கிறது. 


பாரீஸுக்குப் போ என்ற நாவலின் துவக்க வரி இப்படி இருக்கும்.


நாடுகள் என்று பிரிந்து கிடக்கும் எத்தனையோ வண்ணங்களில் மலர்ந்து செழிக்கும் மனித குல வாழ்க்கை என்னும் மலர்களில் ஊறித் ததும்பும் ஜீவ மதுவின் சுவை நாடி ரீங்கரிக்கும் வண்டு போல் இசை பாடிப் பறந்து வந்தது அந்த விமானம்.


இப்படி அவர் எழுத்தும் வந்து விழும் வார்த்தைகளும் seamless ஆக இருக்கும்.


இன்னும் ஓர் உதாரணம். இது ஊருக்கு நூறு பேர் என்ற நாவலில் இருந்து.


ஒரு பெண்ணின் உன்னதமான காதல் அந்தக் கண்களில் தெரிந்தது போலவே மிக மேன்மையாக அவளைக் காதலிக்கிற தனது மனமும் அவளுக்குத் தெரிவதை அவளோடு பேசாத பல மெளனமான கணங்களில் அவர் அடிக்கடி உணர்கிறார்.


எப்படி?


ஜெயகாந்தனின் எழுத்தும் பேச்சும் இன்றளவும் மனதை உயர்த்துவதாகலே இருக்கிறது.





இங்கே காண்பது சீசர் கதைக்காக கோபுலு வரைந்த ஓவியங்கள்.

நன்றி ஆனந்த விகடன்


Comments

  1. ஜெயகாந்தன் பற்றி அருமையான பதிவு. பழையதை அசை போட்டுப் பார்க்கிறேன். ரீகல் டாக்கீஸில் நா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாடமி பரிசு கிடைத்ததற்கான பாராட்டு விழா. நாபா சிரிக்கச் சிரிக்க பேசினார். அதில் ஜெயகாந்தன் கலந்து கொண்டார். ஒரு மணி நேரம் பேச்சு. ஆழமான பேச்சு. மறக்க முடியாத அநுபவம். சோமு கச்சேரி கேட்ட நினைவு இருக்கிறது. பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. என்னுடைய ஃபேவரிட் கேரக்டர் ஹென்றி. என்ன ஒரு அழகான பாத்திரப் படைப்பு. எனக்கு அவருடைய சிறுகதகள் ரொம்ப பிடிக்கும். இந்த விகடன் தொகுப்பில் இல்லைன்னு நெனைக்கறேன். பிள்ளைகள் நன்கு வளர்ந்த பிறகு, கருவுறும் அம்மா, எல்லோரும்.ஏச, அவளுடைய. வெள்ளைக்கார மருமகளும் அந்த மகனும் அவளை ஆசையாக தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள். அருமையாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஹென்றி ஒரு மேன்மையான படைப்பு

      Delete
    2. அந்த நாளும் அந்திடாதோ என எண்ணனும் அளவிருக்கு உசுப்பிவிட்ட நண்பா ! வாழ்க நீ என்ஞான்றும், என்று என்றும்,
      M.s.s

      Delete
    3. அந்த நாளும் அந்திடாதோ என எண்ணும் அளவிருக்கு உசுப்பிவிட்ட நண்பா ! வாழ்க நீ என்ஞான்றும், என்று என்றும்,
      M.s.s

      Delete
    4. நன்றி செளந்தர் படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்

      Delete
  3. அவர் பேசும் போது ஒரு கருத்தை ஆழமாகச் சொல்ல வந்தார். அப்போது கூட்டம் கை தட்டியது. அதற்கு ஜெயகாந்தன் கடிந்து கொண்டார். கடைசி வரை யாரும் கை தட்டவே இல்லை

    ReplyDelete
  4. தன்னுடைய கருத்துக்களை மிக ஆழமாக சொல்லும் சுபாவம் அவருடையது.

    ReplyDelete
    Replies
    1. தெளிவுற அறிந்து தெளிவுற மொழிதல்.

      Delete
  5. அருமையான பதிவு.
    நாம் சந்தித்த " விசேஷமான " நேரங்களில், நாம் பேசியதிலேயே,
    பதிவை ஆரம்பத்திருக்கிறாய்.
    சில நேரங்களில் சில மனிதர்கள் எப்படி விடுபடிருக்கிறது.
    நன்றி பழைய நினைவுகளை எழுப்பியதற்கு.

    ReplyDelete
    Replies
    1. சி.நே.சி.மனிதர்களுக்குத் தானே சாகித்ய அகாடமி விருது? திரைப்படமான அவர் கதைகளைப் பற்றி தனியாக எழுத வேண்டும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...