Skip to main content

நீ தொட்டால்...

 தாவரங்கள் நுணுக்கமான நரம்புக் கூட்டங்கள் அமையப் பெற்றவை. ஒளி,ஒலி,தொடுகை போன்ற புறத் தூண்டுதல்களுக்கு ஆட்படுபவை. தாவரங்கள் வலியை உணரும். எரித்தால்,ஒடித்தால்,வெட்டி எறிந்தால் மிகவும் வேதனைப் படும்.தாவரங்கள் பேசும். எப்படி? வேதிப் பொருட்களை சமிக்ஞையாக வெளிப்படுத்துவதன் மூலம். இந்த சமிக்ஞைகளை அருகில் இருக்கும் தாவரம் புரிந்து கொள்ளும்.  தாவரங்களால் கற்கவும் நினைவில் கொள்ளவும் முடியும். சில புறத் தூண்டுதல்களை அவை நினைவில் கொள்ளுமாறு கற்பிக்க முடியும்.  இப்படி எல்லாம் கண்டுபிடித்துச் சொன்னது ஜெகதீஷ் சந்திர போஸ்.  ஒரு நூறு ஆண்டுகளுக்கு மூன்பு. தான் கண்டு கொண்ட எதற்கும் அவர் காப்புரிமை பெறவில்லை. அதனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்காக அவர் கவலைப் படவும் இல்லை.  'கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு' என்று இவரைப் பாரதி புகழ்வார். "அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்'. என்ற பாரதியின் வசன கவிதை இங்கே பொருள் கொள்ளத் தக்கது.


பல வருடங்களுக்கு முன்பு நண்பர் நரசிம்மனோடு திரூவனந்தபுரம் சென்றேன். இந்தப் பயணம் எப்படி என்றால் நெல்லை வரை பஜாஜ் ஸ்கூட்டரில். பின்பு இரவில் நெல்லையில் பஸ் பிடித்து திருவனந்தபுரம். அங்கிருந்து ஊருக்கு வெகுவாகத் தள்ளி சோலைகள் சூழ்ந்த பகுதி.  அதிகாலை இருளில் அங்கே சேரந்தோம். மேடு பள்ளம் எல்லாம் ஏறி இறங்கினால் ஓடு வேய்ந்த வீடு. டார்ச் ஒளியில் நரசிம்மனுடைய அண்ணன் வரவேற்றார்.  சற்று ஓய்வெடுத்த பின்னர் வெகு அருகிலேயே இருந்த சிற்றருவியில் குளித்து விட்டு வந்தோம். பிள்ளைகள் எல்லாம் தொட்டாற் சிணுங்கி இலையைத் தொட்டு அது சுருங்குவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். என்னோடு நரசிம்மனின் அண்ணன் ராகவன் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம் சொன்னது இதுதான். சாதாரணமாக இதைத் தொட்டால் சுருங்கி விடும். ஆனால் நான் உனக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டேன் என்று மனதில் எண்ணியபடி தொட்டால் அது சுருங்காது. நான் அது போலவே செய்து பார்த்தேன் அது சுருங்கவே இல்லை.


தொட்டாற் சிணுங்கி மட்டும் அல்ல. எல்லாத் தாவரங்களும் புறத் தூண்டுதல்களுக்கு ஆட்படுபவை என்று அன்றே ஆராய்ந்து சொன்னவர் போஸ். சமீபத்தில் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரத்தில் ஆராய்ச்சியாளர்கள் தாவரங்கள் தங்களுக்குத் தண்ணீர் தேவை என்றால்  கூக்குரல் எழுப்புவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அது சாதாரணமாக நம் செவிகளுக்கு எட்டாது.  அது நமது கேட்கும் திறனுக்கு மேம்பட்ட அலை வரிசையில் தான் கேட்கும்.  வசதி குறைவான காலத்தில் சொற்ப ஆராய்ச்சிக் கருவிகள் உதவியுடன் தாவரங்களின் சமிக்ஞை ஒலிகளை ஆய்வு செய்து சொன்னார் போஸ். தாவரங்களின் நுட்பமான இந்த உணர்வத் தன்மைக்கான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளுக்கும்  ஜகதீஷ் சந்திர போஸ் பெரும முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறார்.


அவருடைய ஆராய்ச்சிகளுக்கு அவர் கற்ற இந்தியத் தத்துவ மரபு பெருந்துணையாக இருந்திருக்கிறது. தாகூருக்கும் அவருக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. அது மிகவும் கவித்துவமாக இருந்திருக்கிறது.  தாகூர் ஜெ.ஸி. போஸ் அவர்களை ஆசார்யர் என்றே அழைத்திருக்கிறார். ஒரு கவிஞனுக்கு உண்டான நுண் உணர்வும் கற்பனையும் போஸிடம் இருப்பதை தாகூர் அறிந்திருக்கிறார்.  கவிதானுபவம் தரும் பரவசத்தை போஸ் தனது கண்டுபிடிப்புத் தருணங்களில் உணர்ந்திருக்கிறார்.


போஸ் எழுதுகிறார்.


"நான் அன்னை பூமியின் உயிர்ச் சக்தியில் உயிர்த்து இருக்கிறேன்.. நான் எனது நாட்டு மக்களின் அன்பால் வளம் பெற்றிருக்கிறேன். பல வருடங்களாக இந்த தியாகத் தழல், இந்தியாவின் ஞானம் என்னும் தழல் எரிந்த வண்ணம் இருக்கிறது. லட்சக் கணக்கான இந்தியர்கள் தங்கள் இன்னுயிரால் அதைக் காத்து வருகின்றனர்.  ஒரு சிறு பொறி அதைச் சென்று அடைந்திருக்கிறது. என் வழியாக.'


மேன்மையான மனிதர்கள் இப்படித் தான். நான் செய்தேன் என்று அவர்கள் சொல்வது இல்லை. அடக்கம் தான் அவர்களுக்கு அணி.




Acknowledgement


  1. Rupkatha Journal 'Acharya Jagadish Chandra Bose and Rabindranath Tagore'

  2. Indian Express dated April 20, 2023








Comments

  1. தொட்டாற்சிணுங்கி பற்றி புதிய தகவல். வித்தியாசமான பதிவு. தாவரங்கள் பற்றி நிறைய தகவல்கள். பதிவுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். உடனுக்குடன் படித்து விட்டு எழுதுவதற்கு

      Delete
  2. சுவாரசியமான பதிவு. அடுத்த முறை தொ சி பார்த்தால் ட்ரை பண்ணி பார்க்கனும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. டிரை பண்ணிப் பாரேன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...