“வாழ்க்கை என்பது ஒருவர் வாழ்ந்து விட்டது அல்ல. வாழ்க்கை என்பது ஒருவர் எதை ஞாபகம் கொள்கிறாரோ, அதை எப்படி ஞாபகத்தில் கொண்டு சொல்கிறாரோ அது. “
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சுயசரிதை எழுதினார். அது Living to Tell the Tale என்பது. அந்த புத்தகத்தில் முதலாக இந்த வரிகள் காணப்படுகிறது. பின்னாட்களில் அவர் ஞாபகங்களோடு போராடினார். அவருக்கு மறதி நோய் ஏற்பட்டது. அவர் செல்வாராம். நான் ஞாபகத்தை இழந்து கொண்டிருக்கிறேன். அதிர்ஷ்ட வசமாக நான் அதை இழக்கிறேன் என்பதையே மறந்து போகிறேன். சுற்றிலும் பழகிய முகங்கள் இருந்தாலும் சமயங்களில் தனது மகன்களையே அவர் மறந்து போகிறார். அவருக்குப் பிரியமான மஞ்சள் ரோஜாவையும் கூட. ஒருமுறை அவரது செயலாளர் அவரிடம் கேட்டார். அந்த மதிய நேரத்தில் மார்க்வெஸ் தோட்டத்தில் இருந்தார். “ இங்கே என்ன செய்கிறீர்கள், கேப்ரியல்?” அதற்கு அவர் சொன்னார். “நான் கண்ணீர் சிந்தாமல் அழுது கொண்டிருக்கிறேன். உனக்குப் புரிகிறதா? எனது மண்டையில் இப்போது வெறும் மலக் குப்பை”
ஞாபகங்களிலிருந்தே எழுத்தாளன் எழுதுகிறான். கேப்ரியலோ கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகங்களை இழந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் ஒரு நாவலுக்காக குறிப்புகளை எழுதி வைத்திருந்தார்.
அது Until August என்ற நாவல். இந்த நாவல் பதிப்பிக்கத் தகுதியற்றது என்று அவர் கருதினார். தனது இறப்பிற்குப் பின்னால் கூட இதைப் பதிப்பிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார். அதற்கு மாறாக அவரது வாரிசுகள் இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்தார்கள். முன்னுரையில் அவர்கள் சொல்கிறார்கள். “மங்கிய நினைவுகள் காரணமாக அவர் இதைச் சரியாக எழுதி முடிக்கவில்லை. அதே மங்கிய நினைவுகள் இது ஒரு நல்ல நாவல் என்று கணிக்க முடியாமல் செய்திருக்கவும் கூடும். அவருடைய வாசகர்கள் இதைப் படித்து மகிழட்டும் என்ற எண்ணத்தில் அவருடைய ஆணையை மீறி இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறோம்.”
Until August என்ற புத்தகத்தை நான் படித்தேன். அன்னா மக்தலேனா நாயகி. நடுத்தர வயதுப் பெண்மணி. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். குடும்பம் கணவர் குழந்தைகள் என்று வாழ்க்கை. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் ஒரு தீவுக்குத் தனியே வருகிறாள். அங்கேதான் அவளுடைய அம்மாவின் கல்லறை இருக்கிறது. அதே விசைப் படகு. அவளை அழைத்துச் செல்ல அதே டாக்ஸி டிரைவர். தங்க அதே ஹோட்டல். அம்மாவின் கல்லறையில் வைப்பதற்கு அதே மலர்க்கடையில் அதே மலர்க்கொத்து. இது பல வருடங்களாக நடப்பது. ஆனால் இந்த தடவை என்ன மாறியது?
இரவு நேரம். சாப்பாட்டு மேஜையில் அன்னா ஜின் அருந்திக் கொண்டிருக்கிறாள். அப்போது பக்கத்து மேஜையில் மது அருந்தும் அவனைப் பார்க்கிறாள். அவனுடைய மேஜைக்கு செல்கிறாள். பேச்சுக் கொடுக்கிறாள். தனது அறைக்குச் செல்கிறாள். கதவைத் தாழிடவில்லை. அவன் வருகிறான். கூடுகிறார்கள். அவள் உறங்கி விழிக்கிறாள். தலை கனக்கிறது. அவள் படிக்கும் திகில் புத்தகத்திற்கு நடுவே இருபது டாலர் கரன்ஸிகள் செருகப்பட்டிருக்கின்றன. மனம் நொறுங்கிப் போகிறாள்.
வருடா வருடம் அன்னையின் நினைவு நாளன்று தீவுக்கு வருகிறாள். தங்கும் இடத்தை மாற்றுகிறாள். முன்னறியாத யாரோ ஒருவனிடம் பழக்கம் கொள்கிறாள் என்று கதை வளர்கிறது.
ஒரு வருடம் ஆகஸ்ட் மாதம் அன்னா மக்தலேனா அந்நியனோடு கொள்ளும் ஒரு நாள் பழக்கத்துக்கு முடிவு கட்டுகிறாள். அம்மாவின் கல்லறையைத் தோண்டச் செய்கிறாள். மிச்சம் இருக்கும் எலும்புகளைத் திரட்டிக் கொண்டு ஊர் திரும்புகிறாள்.
கதையை முழுதும் படித்து முடித்த பின்பு மார்க்வெஸ் இந்தக் கதையை ஒரு பொழுதும் பதிப்பிக்கலாகாது என்று சொன்னது சரியே என்று தோன்றியது.
இவர் எழுதிய நூற்றாண்டுத் தனிமை (Hundred years of Solitude) Netflix series ஆக வருகிறது என்று கேள்விப்பட்டேன்.
நூற்றாண்டுத் தனிமையில் இப்படி ஒரு வரி.
“so hot that birds in their confusion were flying into walls... and breaking through screens to die in the bedrooms”
Until August என்ற கதையைப் படித்து முடித்த போது இந்த வரிகள் தந்த சித்திரம் மனதில் நிழலாடியது.
Comments
Post a Comment