வெங்கண்திண் களிறடர்த்தாய்
வித்துவக்கோட்டு அம்மானே!
எங்குப் போய் உய்கேன் உன்
இணையடியே அடையல் அல்லால்
எங்கும் போய்க் கரை காணாது
எறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும்
மாப்பறவை போன்றேனே
குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி
பறவை ஒன்று பாய்மரக் கொடியிலிருந்து பறந்து செல்கிறது. கீழே கடல் நீர் அசைந்தபடி இருக்கிறது. எந்தப் பக்கம் பறந்தாலும் பறவையால் கரையைக் காண முடியவில்லை. மீண்டும் அது பாய்மரக் கொடியின் உச்சிக்கே வந்து சேருகிறது. அது போலவே வித்துவக்கோட்டில் உறையும் எனது இறைவனே! வலிமையான யானையைக் கொன்றவனே! உனது திருவடியை அடையாமல் நான் எங்கு சென்று வாழ்வேன்? எங்கு சுற்றி அலைந்தாலும் உன் இணையடியே வந்து சேர்வேன்.
“தருதுயரம் தடாயால் உன்சரண் அல்லால் சரண் இல்லை “என்று துவங்கி வரும் பத்து பாசுரங்களில் மேலே கண்ட பாசுரம் ஒன்று.
எல்லாமே அற்புதமான பாசுரங்கள். தாய் சினந்தாலும் அவள் முழங்காலையே வந்து கட்டிக் கொள்ளும் குழந்தை. மருத்துவன் வாளால் அறுத்தாலும் சுட்டாலும் அவனையே நம்பி இருந்து அன்பு பூணும் நோயாளி. கதிரவனின் தழல் எரித்தாலும் அவனையே நோக்கி மலரும் தாமரை. எங்கு பறந்தும் திசை அறியாது, கரை காணாது மீண்டும் பாய்மரக் கம்பத்தின் உச்சியிலேயே வந்து அமரும் பறவை. இப்படி எத்தனை எத்தனை அழகான உவமைகள்.
வைணவத்தில் இறைவனையே புகல் என்று பற்றுதல் உயர்ந்த நெறியாகக் கொள்ளப்படுகிறது. அதை சரணாகதி அல்லது பிரபத்தி என்று கூறுவர். பெருமானின் திருவடியில் தஞ்சம் புகுதலே சரணாகதி.
“எல்லா அறங்களையும் கைவிட்டு நீ என்னையே சரண் புகுக. நான் உன்னை எல்லாப் பாவங்களில் இருந்தும் வி்டுவிக்கிறேன்.” இது கீதையில் கண்ணன் சொன்னது. இதை இறுதி வாக்கியம் அல்லது ச்ரம சுலோகம் என்று கூறுவர்.
ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம்ஏகம் சரணம்வ்ரஜ
அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:
என்பது தான் அது. இந்த சுலோகத்தை கீதை வெண்பா அழகுத் தமிழில் பின்வருமாறு சொல்கிறது.
எல்லா அறங்களையும் விட்டொழித்திங் கென்றனையே
நல்லாய் சரண் புகுக, நானுன்னை அல்லல்தரு
பாவங்கள் களின்முற்றும் பற்றறவே விடுவிப்பேன்
மேவுதுயர் எல்லாம் விடு
அவனைத் தவிர வேறு புகல் இல்லை. அவனது பாதங்களையே பற்றுக. எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுக. இவ்வாறு குலசேகர ஆழ்வார் பத்து பாசுரங்களில் சொல்கிறார். உணர்ச்சி மேலிட ஆழ்வார் அழகான பாசுரங்களில் பேசுவது கண்களில் நீர் கட்டச் செய்கிறது.
ஆழ்வார்கள் பற்றி அரவிந்தர் பாரதி மூலம் அறிந்திருக்கிறார். குலசேகராழ்வாரின் குறிப்பிட்ட இந்தப் பத்துப் பாசுரங்களை அரவிந்தர் Refuge என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அது ஆர்யா இதழில் வெளியிடப் பெற்றது.
நாமும் ஒரு எளிய முயற்சியாக மேலே கண்ட பாசுரத்தை ஆங்கிலத்தில் செய்தோம்.
From the cone of the mast
The bird flies and flies
Over the tossing sea
Nowhere it finds the shore
And returns to the mast of the ship
I am like this bird.
I take refuge in your feet
Where else shall I go?
Oh slayer of the strong elephant
With wild eyes!
The Lord of Thiruvithuvakodu
Kulasekara Alwar Perumal Thirumozhi
In English
T Santhanam
உதவிய நூல்
இந்திய இலக்கியச் சிற்பிகள்
குலசேகர ஆழ்வார்
சாகித்ய அகாடமி வெளியீடு
இது 200வது பதிவு. தொடர்ந்து படித்து ஆதரிப்பமைக்கு நன்றி
ReplyDeleteதமிழ் விரிவுரையும் ஆங்கில மொழி பெயர்ப்பும் சிறப்பு, சந்தானம்.
ReplyDeleteஇலக்கியம், சங்கீதம், பக்திமார்க்கம் என்று பல்கலையிலும் உன்னுடைய ஆர்வமும் திறனும் மெச்சத்தக்கது!
Keep rocking and thanks for sharing!
Thank you. யாரென்று தெரியவில்லையே..
Delete200 வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள். மென்மேலும் சிறக்க வேண்டும். ஆர்வமும் பாராட்டத்தக்கது.இந்த பதிவில் மொழி பெயர்ப்பு அருமை நான்கு நாள் முன்னர் தான் திரு வேலுக்குடி அவர்கள் திருவித்துவக்கோடு திவ்யதேசத்தைப் பற்றி சொல்ல கேட்டேன்.
ReplyDeleteநன்றி ராமனாதன் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கு. வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.
DeleteDouble century க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமொழிபெயர்ப்பு அருமை.
நன்றி மதி
DeleteAfter sending only I realized that it has gone as anonymous! Vaidyanathan
ReplyDeleteOh ! Vaidy! Thank you Thank you
Deleteஅருமை. 200க்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி
Delete