For Sale: Baby shoes, never worn
அது ஆறே வார்த்தைகள் கொண்ட சிறுகதை. ஹெமிங்வே எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மெய்யாகவே இப்படி ஒரு கதையை ஹெமிங்வே எழுதியிருக்கிறாரா தெரியாது. ஆறு வார்த்தைகளில் ஒரு கதையைச் சொல்லி விட முடியுமா? ஆறு வார்த்தைகளில் கதையைக் கோடிட்டுக் காட்டலாம். மிகுதிக் கதையை வாசிப்பவர் மனது உருவாக்கிக் கொள்ள வேண்டியது தான்.
For Sale: Baby shoes, never worn
இந்த வரிகள் என்ன சொல்கிறது.
ஒரு பொழுதும் அணியாத குழந்தையின் காலணி ஏன் விற்பனைக்கு வர வேண்டும். குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கி வைத்த காலணி. ஆனால் பிறக்கவில்லை. இனியும் பிறக்க வாய்ப்பில்லை. எனவே காலணி விற்பனைக்கு வருகிறதோ?
இப்படி எல்லாம் மனதில் கதை வளர்கிறது.
ஹெமிங்வேயின் ஒரு சிறுகதை Cat in the Rain. விடுமுறையைக் கழிக்க அமெரிக்கத் தம்பதி இத்தாலியில் ஒரு ஊருக்கு வருகிறார்கள். ஒரு விடுதியில் தங்குகிறார்கள். அவர்களது அறை இரண்டாவது மாடியில். அங்கிருந்து தொலைவில் கடல் தெரிகிறது. எதிரே பூங்கா. மற்றும் ஒரு போர் நினைவுச் சின்னம். வந்ததிலிருந்து விடாது மழை பெய்கிறது. எங்கும் போகவில்லை. கணவன் எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான். மனைவி மழையை வேடிக்கை பார்க்கிறாள். ஐன்னலுக்குக் கீழே ஒரு பச்சை நிற மேஜை. மழை நீர் அதன் மைல் பட்டுத் தெறித்து சிதறியபடி இருக்கிறது. மேஜையில் அடியில் ஒரு பூனைக்குட்டி. மழையில் நனையாமல் தனது உடலைக் குறுக்கிக் கொண்டு இருக்கிறது.
“நான் கீழே போய் அதை எடுத்து வரப் போகிறேன்” என்கிறாள் மனைவி
“நான் போகட்டுமா “இது கணவன்.
“இல்லை நானே போகிறேன் பாவம் அந்தப் பூனை நனைந்து விடப் போகிறது”
என்று மனைவி கிளம்புகிறாள்.
“நீ நனைந்து விடாதே” இது கணவன்.
புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்கவில்லை.
படியில் இறங்கி வருகிறாள். விடுதிக் காப்பாளர் எழுந்து தலை வணங்குகிறார். இவள் கூச்சம் கொள்கிறாள். முதிய காப்பாளனை இவளுக்குப் பிடித்துப் போகிறது. மழையில் நடந்து அவள் பூனை இருக்கும் மேஜையடிக்குப் போகிறாள். இவள் நனையாமல் இருக்க ஒரு பணிப்பெண் குடை பிடிக்க வருகிறாள். காப்பாளர் அவளை அனுப்பியதாகச் சொல்கிறாள்.. மேஜைக்குக் கீழே பூனை இல்லை. ஏமாற்றம் ஆகி விடுகிறது. எங்கே போயிருக்கும். பணிப்பெண் இத்தாலிய மொழியில் ஏதோ கேட்கிறாள். இவள் இங்கே பூனைக் குட்டி இருந்ததையும் எடுத்துப் போக நினைத்ததையும் சொல்கிறாள்.
அறைக்குத் திரும்ப வரும் போது மறுபடியும் விடுதிக் காப்பாளர் இருக்கையிலிருந்து எழுந்து தலைசாய்த்து வணங்குகிறார். இவளுக்கு அவர் தரும் முக்கியத்துவம் ஒருபுறம் சங்கடமாக இருக்கிறது.. மறுபுறம் அந்தச் சிறிது நேர முக்கியத்துவம் தேவையாகவும் இருக்கிறது.
படியேறி அறைக்கு வருகிறாள். பூனைக்குட்டி கிடைத்ததா என்று கேட்கிறான் கணவன். இல்லை அது போய் விட்டது என்கிறாள். பூனைக் குட்டியைக் கையில் எடுத்து ஏந்திக் கொள்ள எத்தனை விரும்பினாள் அவள். ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு. கண்ணாடி முன்னால் அமருகிறாள். நெருக்கமாக வெட்டப்பட்டிருக்கும் அவளது தலை முடியைப் பார்க்கிறாள். அவளுடைய தோற்றம் பையனைப் போல இருக்கிறது. நான் நீளமாக முடி வளர்க்கப் போகிறேன் என்கிறாள் அவள். வேண்டாம் என அவள் கணவன் மறுக்கிறான். இல்லை, நான் வளர்க்கத்தான் போகிறேன். எனது மடியில் ஒரு பூனைக் குட்டியை வைத்துக் கொள்வேன். எனக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மேஜையில் அமர்ந்து வெள்ளிக் கரண்டியில் சாப்பிட வேண்டும். அப்போது வசந்தம் வர வேண்டும். எனது மடியில் ஒரு பூனைக்குட்டி வேண்டும். அதை நான் மெல்லத் தடவிக் கொடுக்க வேண்டும். புதிய ஆடைகள் வேண்டும் என்று அடுக்கிக் கொண்டே போகிறாள்.
கணவன் போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படி என்கிறான்.
அவள் ஜன்னல் வழியாகப் பார்க்கிறாள். இருட்டி விட்டது. மழை பெய்து கொண்டே இருக்கிறது. பனைமரம் மழையில் நனைந்தபடி இருக்கிறது. கணவனின் கவனம் புத்தகத்திலேயே இருக்கிறது.
அப்பொழுது கதவு தட்டப்படுகிறது. பணிப்பெண் வெளியே நிற்கிறாள். அவள் கையில் ஒரு பூனைக்குட்டி இருக்கிறது. விடுதிக் காப்பாளர் கொடுத்து விட்டதாகச் சொல்கிறாள்.
கதை இங்கே முடிகிறது.
இதில் உள்ள விவரங்கள் விடாது பெய்யும் மழை. எங்கேயும் போக முடியாத சூழல். கணவன் மனைவி. சதா படித்துக் கொண்டே இருக்கும் கணவன். வேறு ஒரு தேசம். வேறு ஒரு ஊர். சலிப்பான சூழல். . திடீரென்று ஒரு பூனை. அதிலிருந்து எழும் ஒரு விருப்பம். அதன் வழியாகப் பல விருப்பங்கள். இவைதான் கதையில் சொல்லப் படுகிறது.
சொல்லாமல் விட்டது மனதில் வளருகிறது. கணவன் மனைவியைக் கண்டு கொள்வதில்லை. ஒருவருக்கொருவர் சலித்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. மனைவிக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருக்க வேண்டும். அது பூனைக் குட்டியின் மேல் ஒரு கனிவாய்ச் சுரக்கிறது. அதை மடியில் வைத்துக் கொண்டு தடவிக் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் எழுகிறது. கணவன் அவளைப் பெரிதும் கண்டு கொள்வதில்லை. விடுதிக் காப்பாளர் அவளைக் கவனித்துக் கொள்வது அவளுக்குப் பிடித்திருக்கிறது.
நல்ல கதை சொல்வதை விட சொல்லாமல் விடுவது அதிகம். ஹெமிங்வேயின் கதை அப்படித்தான்.
Beautiful commentary on the story. Well written as always.
ReplyDeleteThank you Janani
Deleteகுழந்தையிடம் இருந்த பல காலணிகளில், உபயோகப் படுத்தாத ஒன்று விலைக்கு வந்திருக்கலாம். 🙂🙂
ReplyDeleteஎப்பொழுதும் போல அழகாக எழுதியிருக்கிறாய்
இப்படியும் யோசிக்கலாம். 😆நன்றி படித்ததற்கு
Deleteஅருமையான தெளிவான கதை. நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி
Delete