Don't go far off
Don't go far off, not even for a day, because -
because - I don't know how to say it: a day is long
and I will be waiting for you, as in an empty station
when the trains are parked off somewhere else, asleep.
Don't leave me, even for an hour, because
then the little drops of anguish will all run together,
the smoke that roams looking for a home will drift
into me, choking my lost heart.
Oh, may your silhouette never dissolve on the beach;
may your eyelids never flutter into the empty distance.
Don't leave me for a second, my dearest,
because in that moment you'll have gone so far
I'll wander mazily over all the earth, asking,
Will you come back? Will you leave me here, dying?
Pablo Neruda
தொலை தூரம் சென்று விடாதே
தொலை தூரம் சென்று விடாதே
அது ஒரு நாள் ஆனாலும் கூட
ஏனென்று சொன்னால்..
ஏனென்று சொன்னால்..
எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை
ஒரு நாள் என்பது நீண்ட பொழுது
நான் காத்திருப்பேன்
காலியான ஸ்டேஷனில்
ரயில் எல்லாம் எங்கோ நிறுத்தப்பட்டு
உறங்கிக் கொண்டிருக்கும்
என்னை விட்டுச் சென்று விடாதே
அது ஒரு மணி நேரம் ஆனாலும் சரி
ஏனென்று சொன்னால்
வேதனையின் சின்னச் சின்னத் துளிகள் சேர்ந்து ஒன்றாகப் பெருகி ஓடும்
இருப்பிடம் தேடி அலையும் புகை வழி தவறி
எனக்குள் நுழையும்
தொலைந்து போன இதயத்தைத் திணறச் செய்யும்
ஓ.. உனது நிழல் வடிவம்
கடற்கரையில் மறைய வேண்டாம்
உனது கண் இமைகள்
வெறும் தொலைவைக் கண்டு
படபடக்க வேண்டாம்
எனதன்பே
என்னை விட்டுப் போகாதே
அது ஒரு வினாடியானாலும் சரி
ஏனென்று சொன்னால் அந்தக் கணம்
நீ வெகு தூரம் சென்று விடுவாய்
நான் பிரமை பிடித்தவனாக
இந்தப் பூமி எங்கும் அலைந்து கொண்டு இருப்பேன் ஒரு கேள்வியோடு
நீ திரும்ப வருவாயா?
இல்லை இங்கேயே இறந்து போக விட்டு விடுவாயா?
பாப்லோ நெருடா
ஆங்கிலம் வழியாகத் தமிழில்
தி சந்தானம்
பாப்லோ நெருடாவின் கவிதை அது. என்ன செய்வது? இதுவும் காதல் கவிதை தான். நெருடா.. நெருதா என்றும் சொல்வார்கள். அவர் நிறையக் காதலித்தார். எனவே நிறையக் காதல் கவிதைகள் எழுதினார். சிலி தேசத்தைச் சேர்ந்தவர். தீவிர அரசியல் செயல்பாட்டாளரும் கூட.
என்னுடைய பழைய பதிவுகள் சிலவற்றில்.. சிலி தேசத்துக் குயில் 1 சிலி தேசத்துக் குயில் 2 என்று தலைப்பிட்டது உட்பட இவரது கவிதைகளை மொழி பெயர்த்து இருக்கிறேன். மொழிபெயர்ப்பு என்பது முகத்திரை அணிந்த பெண்ணை முத்தமிடுவது போல என்று எங்கோ படித்திருக்கிறேன். ஸ்பானிய மூலக் கவிதையை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்ப்பதை என்னவென்று சொல்வது?
ஆட்சியாளர்களை விமர்சிப்பது நல்லது அல்ல. நெருடா அதைச் செய்தார். சுரங்கத் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதைக் கண்டித்தார். இதன் விளைவாக நாட்டை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. எத்தனை வருடங்கள்? ஐந்து வருடங்கள். பல நாடுகளில் சென்று வாழ்ந்தார். அப்படி ஒரு சமயம் இத்தாலியில் ஒரு சிறிய தீவில் இருந்தார்.
இத்தாலியில் தீவில் இருந்த நெருடாவைக் கதாபாத்திரமாக்கி ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அந்த இத்தாலியத் திரைப்படத்தின் பெயர் Il Postino (The Postman) தீவில் ஒரு மீனவனின் மகன். மரியோ. மீன் பிடிக்கும் தொழில் அவனுக்குப் பிடிக்கவில்லை. எப்படியோ முயற்சி செய்து தபால்காரன் ஆகிவிடுகிறான். அது ஓரு தாற்காலிகமான வேலை. எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். சொந்தமாக ஒரு சைக்கிள் இருக்க வேண்டும். மரியோவிடம் இந்த இரண்டும் இருந்தது. வேலை கிடைத்து விடுகிறது
எப்படி என்றால் அந்தத் தீவில் அதிகமும் கடிதம் வருவது நெருடாவுக்குத் தான். தபாலில் வந்த கடிதங்களைக் கொடுக்க அடிக்கடி வீட்டுக்கு வருகிறான். பல மைல் தூரம் சைக்கிளை மிதிக்க வேண்டும்.
நெருடாவுக்கு கடிதங்களைக் கொண்டு வரும் இவனோடு நட்பு ஏற்படுகிறது.
பழக்கம் அவரோடு நெருக்கத்தை வளர்க்கிறது. நெருடா எழுதும் கவிதைகளும் அவனுக்குப் பரிச்சயம் ஆகிறது. மரியோ அவரிடம் கேட்கிறான்.
உருவகம் என்பது என்ன?
வானம் அழுகிறது என்று நான் சொன்னால் என்ன புரிந்து கொள்வாய்? என்று நெருடா பதில் கேள்வி கேட்கிறார்.
மழை பொழிகிறது என்று சொல்கிறான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கவிதையின் நுணுக்கங்களைப் புரிய வைக்கிறார். என்றாலும் அவனால் ஒரு கவிதை கூட எழுத முடிவதில்லை.
(தொடரும்)
நல்ல பதிவு. ஒருமுறை எனது நண்பன் அவனது வலைதளம் மூலமாக கவிதை எப்படி எழுதுவது என்று பாடம் எடுக்க முடியுமா என்று கேட்டான். கவிதை எழுதுவதை ஒரு வரைமுறையாக சொல்வது என்று எனக்கு புலன்படவில்லை - இலக்கணம், உவமேயம், எதுகை, மோனை என்பதெல்லாம் கற்றுக் கொடுக்கலாம். ஆனால் கவிதை எழுதுவதற்கான உந்துதலையும், அதற்கான உள் காட்சியையும் எப்படி கற்றுக்கொடுப்பது? உளியை சுத்தியல் கொண்டு கல்லைப் பெயர்ப்பதை கற்பிக்கலாம் - ஆனால் கல்லுக்குள் அமைந்திருக்கும் உருவத்தை சிற்பிதான் கண்டு பிடிக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் என்னால் இயலாது என்று சொல்லி விட்டேன். உனது அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete- சீனு
முற்றிலும் சரி. பறவையை வரைவது எப்படி என்ற பிரெஞ்சுக் கவிதையின் தமிழாக்கம் நினைவிருக்கிறதா? ஸ்ரீராம் என்பவர் செய்தது
Delete