எனக்கு சத்யஜித் ரேயின் படங்கள் பிடிக்கும். அநேகமாக அவரது எல்லாப் படங்களும் பார்த்திருக்கிறேன். சத்யஜித் ரேக்கு நேருவைப் பிடிக்கும். அவர் நேருவைப் பற்றிச் சொல்வார்.
உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? சத்யஜித் ரே Sight and sound என்ற பத்திரிக்கைக்கு 1970 ம் வருடம் கொடுத்த பேட்டியில் இவ்வாறு சொன்னார் என்று Mainstream என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள். ஐ.ஏ.எஸ் பரீட்சைக்கு படிப்பவர்கள் அப்போது எல்லாம் Mainstream படிப்பார்கள். நான் ஐ.ஏ.எஸ் பரீட்சைக்குப் படித்தவன் அல்ல. அரசியல் அறிவு வேண்டி அதைப் படித்தேன். அரசியல், இலக்கியம், தத்துவம் என்று பேச நண்பர்கள் குறைவாகவே இருந்தார்கள். அவர்களோடு செலவிட்ட நேரமும் குறைவு. ஆனால் அறிந்தது அதிகம்.
சத்யஜித் ரே நேருவை விரும்பியிருக்கிறார். பலரும் விரும்பி இருக்கிறார்கள். விமர்சித்து இருக்கிறார்கள். அவரோடு விவாதித்து இருக்கிறார்கள். யாரும் அவரை வெறுத்தது இல்லை.
கேட்டும் படித்தும் அறியாத காலத்திலே நான் நேருவைப் பார்த்தேன். ஆறு வயது. தெரு முனையில் நேரு வந்தார். மாலை நேரம். திறந்த ஜீப்பில் வந்தார். முன்னேயும் பின்னேயும் ஒலி செய்தபடி பறக்கும் வாகனங்கள் இல்லை. சாதாரணமான வேகத்தில் அந்த ஜீப் வந்தது. கடந்தும் போய் விட்டது. நான் பார்த்த நேரு களைத்து இருந்தார். ரோஜா போன்ற நிறம். சற்றே வாடிய ரோஜா. குழந்தைகளான எங்களைக் கண்ட உடன் அந்த வாடிய ரோஜா மலர்ந்து சிரித்தது. கைகளை அசைத்து மகிழ்ச்சியைத் சொன்னது. காட்சியிலிருந்து மறைந்து போனது. நேரு மாமாவை பிடித்துப் போயிற்று. பார்த்தவுடனே ஏற்படும் பிடித்தம். சிலரோடு தான் அது நிகழும்.
நேரு தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு மெய்யானவராக இருந்தார். ஏற்றுக் கொண்ட தலைவருக்கு உண்மையானவராக இருந்தார். அவரை வியந்து ரசிப்பவராக இருந்தார். அவரோடு முரண்பட்டு தவிப்பவராகவும் இருந்தார்.
அவர் சிறப்பாக எழுதினார். பொங்கும் உணர்ச்சியில் அவருடைய வார்த்தைகள் அழகாகப் பெருகி ஓடியது. அதில் எப்போதும் ஒரு நேர்மை இருந்தது. யாருக்கு எழுதினாலும். ஒரு கவிஞனின் உள்ளம் அவரிடம் இருந்தது. அவர் மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசித்தார். அன்பாகக் கடிந்து கொள்பவராகவும் இருந்தார்.
வசை பாடுவது அவருக்குத் தெரியாது. திறந்த உள்ளம் அவருடையது. விமர்சனங்களை நேர்கொண்டார்.
“வையத்தலைமை கொள்” என்றார் பாரதி. நேரு அவர் வாழும் காலத்தில் உலகம் மதிக்கும் தலைவராக இருந்தார். விடுதலைக்காக ஒலிக்கும் குரல் அது எந்த நாட்டுடையதாக இருந்தாலும் சேர்ந்து ஒலிக்கும் குரல் அவருடையதாக இருந்தது.
அவருடைய சாதனைகள் அதிகம். அதைப் பற்றி எவ்வித விளம்பரமோ பிரகடன முழக்கங்களோ அவர் செய்தது கிடையாது.
மாறாக I am after all a Prime Minister என்று சொல்லும் அடக்கம் அவரிடம் இருந்தது.
செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது… போக வேண்டிய தூரம் நீண்டு இருக்கிறது.. என்ற தெளிவு இறுதி வரை அவரிடம் இருந்தது.
மே 27 2026 நேருவின் அறுபத்தி இரண்டாவது நினைவு நாள்.


👌அருமை.
ReplyDeleteசமீபகாலமாக நேருவை வசை பாடி, தங்களது தோல்விகளை மறைக்க முயற்சித்தவர்களையே பார்த்தவர்களுக்கு, இந்த அஞ்சலி சிறப்பு.
நான் நிறைய நண்பர்களுக்கு இதை அனுப்பியுள்ளேன்.
வாழ்த்துகள்.
நன்றி மதி
DeleteI am proud to say that I am a fan of both Nehru and Ray .Beautifully written.
ReplyDeleteThank you Ram. If I remember correct you owned a copy of Our films, Their films by Satyajit Rai
Delete