சூல் கொண்டு அசையும் மேகத்
திரள்கள்
மழையில் நனைந்த பனைமர மேனி
……………….
கரவு,தனிமை, அச்சம்
கறுப்பு நிறத்தின் வெவ்வேறு சாயைகள்……..
இது எழுபதுகளில் வந்த நெரோலாக் பெயிண்ட்ஸ் விளம்பரக் கவிதை. அற்புதமான கவிதை. கறுப்பு நிறத்தைக் கொண்டாடிய கவிதை. கணையாழி பத்திரிக்கையில் பல வருடங்கள் முன்னால் படித்திருக்கிறேன். இந்த கவிதையைக் குறிப்பிட்டு சிலாகித்தவர் யாரென்று தெரியவில்லை.
இரவில் இருள் வந்து சூழும். இருள் கறுப்பாக இருக்கும். காலம் பேர்வது ஓர் காரிருள் ஊழி ஒத்ததால் என்று பேசும் நம்மாழ்வார் பாசுரம்.
ஆரம்பப் பள்ளியில் ஆசிரியை எழுதும் பலகை கறுப்பாக இருக்கும். சாக்பீஸால் எழுதி அழித்து அழித்து ஒரு சாம்பல் நிறம் கொண்டு விடும். பள்ளிக்கு ஆய்வாளர் வரும் போது ஊமத்தை இலை கொண்டு அதைத் தேய்ப்பார்கள் மீண்டும் கறுப்பாகி விடும்.
சிறு வயதில் கண்ணா கருமை நிறக் கண்ணா என்று ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன். அந்தக் கறுப்புப் பெண்ணை யாரும் மணம் செய்து கொள்ள மாட்டார்கள். மனம் பார்க்க மறுப்பவர் முன் என்னை ஏன் படைத்தாய் என்று வருத்தப் படுவாள். அழுகையாக வரும்.
நான் போகும் கிராமத்து வழியில் கரிசல் மண்ணைப் பார்க்க முடியும். உழுது போட்ட கரிசல் மண்ணின் கறுப்பு பார்க்க அத்தனை அழகு.
எத்தனையோ வண்ணத் திரைப்படங்களைப் பார்த்தாலும் கறுப்பு வெள்ளைப் படங்கள் காட்டிய காட்சியின் அழகெல்லாம் மனதை விட்டு நீங்குவது இல்லை.
கறுப்பு என்பது நிறம் மட்டும் அல்ல. அது ஒரு உணர்வு.
ஓரு நாள் வானம் கறுப்பாகப் பொழியும்.
ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆதங்க வெளிப்பாடான கவிதையின் துவக்கம் இது. எண்பதுகளில் வந்த ஒரு சிறு பத்திரிக்கையில் படித்து இருக்கிறேன். கவிதையை முழுவதும் நினைவில் கொள்ளாமல் போனோமே என்று மனம் வருந்துகிறது.
கறுப்பு இன மக்களுக்காகப் போராடியவர் மார்டின் லூதர் கிங். இவருடைய எனக்கொரு கனவு உண்டு என்ற பேச்சு உணர்ச்சிகரமானது. இணையத்தில் கேட்டிருக்கிறேன்.
இந்நாட்களில் கறுப்பு என்பது அரசியல் செயல்பாட்டின் ஒரு குறியீடு மட்டுமே. எல்லா அரசியல் இயக்கங்களும் கறுப்பை தனதாக்கிக் கொள்ளும் காலம்.
லாங்ஸ்டன் ஹுயூஸின் கவிதை ஓன்றோடு நிறைவு செய்வோம்
இப்போது எல்லாம்
கனவு காண்பவர்களுக்கு
கனவு கிடைப்பது இல்லை
பாடகர்களுக்குப் பாடலும்
சில இடங்களில்
கரிய இரவும்
குளிர்ந்த இரும்பும்
நிலவுகின்றன
ஆனாலும்
கனவு திரும்பவும் வரும்
பாடல் தனது சிறைக் கதவை
உடைத்து வெளியே வரும்
The vivid narration makes the essay read more like an engaging story. The movement between literature, history, cinema, identity, and lived experience reflects a wide-ranging thought process.
ReplyDeleteYes, the thoughts wander like a search light that waves its beam across in the dark stage where the plays are held
ReplyDelete