தாயே உன்னை வணங்குகிறேன்
நீரின் தூய்மை
கனியின் இனிமை
குளிர்ந்த காற்று
பயிரின் பசுமை
எல்லாம் நீயே
தாயே உன்னை வணங்குகிறேன்
வெண்ணிற நிலவில்
சிலிர்க்கும் இரவு
மலரும் பூக்கள்
மரங்களின் அழகு
மென்னகை புரிவாய்
இன்சொல் அருள்வாய்
சுகமே தருவாய்
வரமே அருள்வாய்
தாயே உன்னை வணங்குகிறேன்
கோடி கோடி கண்டங்கள்
ஒலியின் ஆரவாரம்
கோடி கோடியாய்
கூர்வாள் ஏந்தும் கைகள்
அபலை என்று
யார் உன்னைச் சொல்வார்
பெருவலி கொண்டு
எமைக் காப்பவள் நீ
எதிரியின் படைகள்
பொடிப் பொடியாக்கும்
தாயே உன்னை வணங்குகிறேன்
நீயே வித்தை
நீயே தருமம்
நீயே இதயம்
நீயே ஜீவன்
நீயே என் உயிர் மூச்சு
என் கரங்களின் சக்தி
இதயத்தில் பக்தி
கோயில் தோறும்
விளங்கும் சிலை நீ
தாயே உன்னை வணங்குகிறேன்
பத்துக் கைகள் கொண்ட துர்க்கை
தாமரை மலரில் அருளும் இலக்குமி
ஞானம் வழங்கும் தெய்வ வாணி
நிகரில்லாத் தூய்மை
திகழும் செழுமை
போற்றினேன் உன்னை
தாமரை தன்னை
நீரின் தூய்மை
கனியின் இனிமை
தாயே உன்னை வணங்குகிறேன்
வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை படித்திருக்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு எளிமையான தமிழ் மொழியாக்கம் செய்தேன். அது தான் மேலே காண்பது.
வந்தே மாதரம் வங்க மொழியில் காலையில் ரேடியோவில் ஒலிக்கும். ஒரு நிமிடம் ஒலிக்கும். சிறு வயதிலிருந்து கேட்டு மனதில் ஏறிய பாடல். பொருள் அறிந்தது இல்லை. வளர்ந்த பின் பாரதியைப் படித்த பின் ஒருவாறு பொருள் உணர முடிந்தது.
வந்தே மாதரம். சுதந்திரப் போராட்டத்தின் போது ஒலித்த எழுச்சி முழக்கம். எல்லாத் தரப்பினரையும் அது போராட்ட களத்துக்கு இழுத்து வந்தது. கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தில் வ.உ.சி யாக நடித்த சிவாஜி கணேசனும் சுப்ரமணிய சிவாவாக நடித்த டி.கே.ஷண்முகமும் பெருங்குரல் எடுத்து இந்த கோஷத்தை முழங்குவார்கள்.
வந்தே மாதரம் முழங்க முழங்க அவர்கள் காவலரால் இழுத்துச் செல்லப்படுவார்கள்.சிறு வயதில் மனதில் பதிந்த உணர்ச்சிகரமான காட்சியது.
தாயென நாட்டை வணங்குவதும், தாயென மொழியைப் போற்றுவதும் அப்படி வணங்கிப் போற்றி உணர்ச்சியும் பெருமிதமும் கொள்வதும் இயல்பான ஒன்று.
வந்தே மாதரம் பாடலுக்கு மெட்டமைத்தது ரவீந்திரநாத் தாகூர். முதலாக அதைப் பொது வெளியில் பாடியதும் அவரே. வந்தே மாதரம் வெறும் கோஷம் அல்ல. மக்களின் உணர்வோடு கலந்த ஒன்று. அந்தப் பாடல் எல்லாத் தரப்பினரும் நெஞ்சில் கொள்ளும் ஓரு தேசியப் பாடலாக ஆனது. ஆனால் பாடலின் நான்கு ஐந்தாம் பத்திகள் உருவ வழிபாட்டை சொல்வதாக இருந்தது. ரவீந்திர நாத் தாகூர் பிரம்ம சமாஜ மரபைச் சார்ந்தவர். உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டவர் அல்லர். அதே போலவே உருவ வழிபாட்டை ஏற்காத பிரிவினர் நாட்டில் இருந்தனர். தேசப் பற்று கொண்ட எல்லோரும் பாடும் விதமாக முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுவது சரியாக இருக்கும் என்று தாகூர் கருதினார். அவரது கருத்து அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வானொலியில் கேட்டுப் பழகி மனதில் பதிந்த இரண்டு பத்திகளே இன்றளவும் நினைவில் இருக்கிறது.
தமிழில் மொழியாக்கம் செய்து பார்த்த போது முதல் இரண்டு பத்திகளை ஏற்றுக் கொண்ட தாகூரின் கவி உள்ளம் புரிந்தது.
அருமை !
ReplyDeleteநன்றி சீனு
Delete👌 எளிய மொழி பெயர்ப்பு.
ReplyDeleteவந்தே மாதரம் குறிப்பு அருமை.
நன்றி மதி
Deleteஅருமையான மொழி பெயர்ப்பு. இதுவரை தெரிந்து கொண்டதில்லை. வாழ்த்துக்கள் சந்தானம்.
ReplyDeleteநன்றி ராமனாதன்
Delete