Skip to main content

சிலி தேசத்துக் குயில்

 ஒரு நதி எங்கே துவங்குகிறது?  அறிதல் கடினம். ஒரு சிரிப்பு எங்கே துவங்குகிறது?  அறிய முயலலாம். சில சிரிப்புகள் புருவங்களில் துவங்குகிறது. சில சிரிப்புகள் நெற்றியில் துவங்குகிறது. மூக்கில் பரவி நாசி மடல்களில் சிலிர்க்கிறது. இதழ்களில் கண நேரம் நிலை பெறுகிறது. பின்பு வானவில்லைப் போல மறைந்தும் விடுகிறது. மனதில் மழையும்  இள வெயிலும் மாறி மாறி அடிக்கிறது. 


பாப்லா நெருடா என்று ஒரு அற்புதமான கவிஞர். சிலி தேசத்தைச் சேர்ந்தவர். கவிஞர் மட்டுமல்ல. தீவிர அரசியலில் ஈடுபட்டவர். பல பதவிகள் வகித்தவர். இவர் பிறந்து 118 ஆண்டுகள் ஆகிவிட்டன.. அவர் சிரிப்பை பற்றி எழுதிய ஒரு கவிதையைப் பார்க்கலாம்.


உனது சிரிப்பு


ரொட்டித் துண்டை எடுத்துச் செல்

என்னிடமிருந்து

நீ விரும்பினால் காற்றை எடுத்துச் செல்

ஆனால் உன் சிரிப்பை மட்டும் என்னிடமிருந்து எடுத்துச் செல்லாதே

நீ பறித்த ரோஜாவை எடுத்துச் செல்லாதே

மகிழ்ச்சியில் திடுமெனத் தெறிக்கும் திவலையை

உனக்குள்ளே ஜனிக்கும் வெள்ளி அலையை..


எனது போராட்டம் கடுமையானது

களைத்த கண்களுடன் நான் திரும்பி வருகிறேன் 

சில பொழுது, மாறாத இந்த உலகைப் பார்த்தவனாய் 

ஆனால் உனது சிரிப்பு வரும்போதே 

வானளவு உயர்கின்றது

என்னை வேட்பதாய் 

வாழ்வின் எல்லாக் கதவுகளையும் திறப்பதாய் ..


எனதன்பே!

இருளான கணத்தில் உன் சிரிப்பு திறந்து  கொள்கிறது

எனது ரத்தம் தெருக் கற்களைக் கறையாக்குவதை நீ பார்க்கிறாய் 

ஏனென்றால் உனது சிரிப்பு என் கைகளில் மின்னும் புதிய வாளைப் போல..


வேனிற்காலத்தில் கடலருகே உனது சிரிப்பு நுரையலையாய் எழுகிறது

வசந்தத்தில் நான் காத்திருக்கும் ஒரு நீல மலராக வருகிறது..


சிரி.. இரவில்.. பகலில்..நிலவில்..

சிரி.. வளைந்து செல்லும் தீவுத் தெருக்களில்

சிரி.. உன்னை நேசிக்கும் இந்த பைத்தியக்காரப் பிள்ளையைப் பார்த்து..


ஆனால்.. எனது கண்கள் திறக்கும் போது

பின்பு மூடும் போது

எனது காலடி செல்லும் போது

எனது காலடி திரும்பும் போது 

ரொட்டி, காற்று, வெளிச்சம், வசந்தம்

யாவற்றையும் எனக்கு மறுத்து விடு

ஒரு பொழுதும் உனது சிரிப்பை மறுத்து விடாதே

எனில் நான் மரித்து விடுவேன்


ஆங்கிலம் வழியாகத்

தமிழில் 


தி சந்தானம்




Comments

  1. சிரிப்பைப் பற்றி அருமையான கவிதை. சமீப காலத்தில் இது சற்று கிடைத்தற்கரிய பொருளாக இருக்கிறது. மொழி பெயர்பிற்கு நன்றி

    ReplyDelete
  2. It's Very tough to translate Neruda . You have done it so well Santhanam .

    Your Laughter' was published as part of a collection of poetry by Neruda entitled The Captain's Verses, which was published in the year 1972. 'Your laughter' was one of Neruda's late poems. This is why he is able to look back at his life and examine all the struggles he has been through.

    ReplyDelete
  3. Reference about Your Laughter taken from https://beamingnotes.com/2014/11/11/analysis-laughter-pablo-neruda/

    ReplyDelete
    Replies
    1. Thank you Ram for the beaming notes. I landed in your laughter in a aimless search

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...