அது 1993 ம் வருடம். மதுரையில் நாடக விழா நடந்தது. கோமல் சுவாமிநாதன் பொறுப்பேற்று நடத்தினார். பல நவீன நாடகக் குழுக்கள் பங்கேற்றன. ஞாநியின் பரீஷா குழுவும் அதில் அடக்கம்.அன்று துவக்க விழா. நான் அரங்கிற்கு வெளியே இருந்தேன். விழாவைத் துவக்க இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. ஒரு கார் அவரை இறக்கி விட்டுச் சென்றது. இறங்கிய அவர் என் மீது ஏறக்குறைய மோதுவது போல ஆயிற்று. சென்ற வாரக் குமுதத்தில் 21ம் விளிம்பு என்று அவர் எழுதிய கட்டுரைத் தொடரில் என்னுடைய கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை சிலாகித்து எழுதியிருந்தார். எனது நண்பன் ஆர்க்கே நான் கையெழுத்து இட்டுத் தந்திருந்த கவிதைத் தொகுப்பின் ஒரு பிரதியை அவரிடம் தந்திருக்கிறான். நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்த போது இதை சுஜாதா குறிப்பிட்டார். "In future everybody will be famous for at least a few minutes" என்று அவர் எப்போதோ எழுதியிருந்ததைக் குறிப்பிட்டேன். சுஜாதா கண்களை அகல விரித்துப் பார்த்தார். ஓரு கல்லூரி மாணவனுக்கு உரிய பரபரப்பும் வேகமும் அவரது பேச்சில் இருந்தது. "கலாப்ரியா வந்திருக்கிறாரா" என்று ஆசையுடன் கேட்ட...